தமிழ்ப் பொது வேட்பாளரிடம் முல்லைத்தீவு தேர்தல் உலாவுக்கு வலியுறுத்தல்
இது தொடர்பில் தமிழ்மக்கள் பொதுக்கட்டமைப்பு கருத்திலெடுத்து செயற்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முல்லைத்தீவுக்கு வருவாரா? என வேர்கள் தமிழ்ச்சங்கம் தன் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
முல்லைத்தீவு நகரில் இருந்து தெற்கு நோக்கி இருக்கும் கொக்கிளாய் முதல் முல்லை நகரம் வரை தேர்தல் பரப்புரை உலா ஒன்றுக்கு தமிழ்ப் பொது வேட்பாளர் தானும் பங்கெடுத்து வாய்ப்பளிக்க வேண்டும்.
அத்தகைய ஒரு தேர்தல் உலா ஈழத்தமிழ் இளம் சமூகத்தினரிடையே உள்ள ஈழத்தேடலுக்கு உந்துசக்தியாக அமையும் என அவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அவசியமாகும் தேர்தல் உலா
அதன் செயற்பாட்டாளர்களில் ஒருவரான கவிஞர் நவி இதுதொடர்பில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட நேரம் எனக்கு வயது ஒன்று. ஈழம் பட்ட துயரை செய்திகள் வழியாகத்தான் அறிந்து வருகின்றேன். பல விடயங்கள் என்னவென்றே தெரியாத ஒரு சந்ததியாகவே நாம் ஈழத்தில் வளர்ந்து வருகின்றோம்.
ஈழப்போராட்ட வரலாற்றையும் இலங்கையில் உள்ள இனப்பிரச்சினையின் மூலம் எது எனத் தேடும் ஒரு சூழலையும் வேர்கள் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர் எமக்கு ஏற்படுத்தி தந்த போதுதான் எங்கள் கடந்த காலத்துயரங்களை நாம் உணரத்தலைப்பட்டோம்.
தமிழ் பொதுவேட்பாளர் பா.அரியநேந்திரன் ஐயா முல்லைத்தீவின் கிழக்கு மற்றும் மேற்கு பரப்பெங்கும் ஒரு தேர்தல் உலா வரவேண்டும் என வேர்கள் தமிழ்ச்சங்கத்தினர் சார்பாக நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லைக் கிராமங்களில் மாற்றம்
முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களால் தமிழர்களின் தொடர்ச்சியான நிலப்பரப்பு துண்டாடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கின் நிலத் தொடர்ச்சியை இல்லாது செய்து சிங்கள மயமாக்கும் சிங்கள அரசாங்கத்தின் முயற்சியை உடைத்தெறிய தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் உலா உதவும் என எதிர்பார்க்கப்படடுகிறது.
வெற்றி பெற முடியாத போதும் அது நன்றாகவே புரிந்து கொள்ளப்பட்டு, தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ள இந்த வேளையில், அதன் மூலம் ஆற்றக்கூடிய செயற்பாடுகளை சரிவர செய்து முடிக்க வேண்டியது அவசியமாகும்.
வேர்கள் தமிழ்ச்சங்கத்தின் இந்த வேண்டுகையும் தமிழ் பொது வேட்பாளரை களமிறங்கியதன் மூலம் ஆற்றக்கூடிய செயற்பாடுகளில் ஒன்றை சுட்டுவதாகவே இருக்கிறது என சமூகவியல் ஆய்வாளர் வரதன் குறிப்பிடுகின்றார்.
கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் மற்றும் குமுழமுனை, செம்மலை, அளம்பில், உடுப்புக்குளம், சிலாவத்தை போன்ற முல்லைத்தீவின் தெற்கு நோக்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஈழத்தேசியப் பற்றை மென்மேலும் ஊற்றெடுக்க செய்துகொண்டிருக்கும் சிறந்த உந்துவிசையாக தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் உலா அமையும் எனவும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
பரப்புரை உத்தி
இலங்கையில் ஒன்பதாவது சனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பொதுத்தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற ஒரு புதிய அணுகுமுறை ஆச்சரியப்படுமளவுக்கான பாரிய மாற்றங்களை ஈழத்திலும் உலகப் பரப்பிலும் ஏற்படுத்தி விடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
விரும்பியோ விரும்பாமலோ, சிங்கள அரசியல் தலைமைகளை ஒரு ஆட்டம் காணவைத்த தமிழர்களின் புத்திசாலித்தனமான நகர்வாகவே; தமிழ்ப்பொது வேட்பாளரை களமிறங்கிய விடயத்தை நோக்க வேண்டும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான ஒரு முயற்சியாக முன்னெடுக்கப்படும் தமிழ்ப் பொது வேட்பாளரின் பயணம் ஈழத்தின் மூலைமுடுக்கெல்லாம் செல்ல வேண்டும்.
இப்படியொன்று நடந்து கொண்டிருப்பதை மக்களின் மனங்களில் ஆழமாக பதிய வைக்கும் வகையில் அது நகர்த்தப்பட வேண்டும்.
தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் கவர்ந்து கொள்ளும் வகையிலான தேர்தல் பரப்புரை உத்திகளை கையாளவும் அதற்கான காய் நகர்வுகளை முன்னெடுக்க தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு விரைந்து செயலாற்ற வேண்டும்.
இந்த விடயத்தில் இளையவர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் வேர்கள் தமிழ்ச்சங்கத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான கவிஞர் நவியின் கருத்துக்கள் உற்று நோக்க வேண்டியவை என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் முல்லைத்தீவின் கிராமங்களில் ஒரு தேர்தல் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்வாரா?
சனாதிபதித் தேர்தலுக்கு இருக்கும் காலம் மிகக்குறைவாக உள்ள இன்றைய சூழலில் தமிழ்மக்கள் பொதுக்கட்டமைப்பு எப்படி செயற்படப் போகின்றது என்பதிலேயே பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டதன் வெற்றி இருக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |