மின்சார கட்டணம் அதிகரிப்பு:நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கள்
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான, இலங்கை மின்சார சபையின், முனைப்புக்களுக்கு இன்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் பொதுமக்களை மின்சாரம் தாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வை பொதுமக்கள் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையின் நடவடிக்கை
இலங்கை மின்சார சபையின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையானது கடந்த கால நஷ்டத்தை ஈடு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது உள்ளூர் தொழில்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.