யாழ். சாவகச்சேரி பகுதியில் மாலை வரை மின்சாரமின்றி சிரமத்தை எதிர்நோக்கிய மக்கள்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டுவதற்காக துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை மின்சார சபை மீள வழங்காமையால் குறித்த கிராமமே நேற்றைய தினம் (28.03.2023) மின் வசதி இன்றி அல்லல் பட்டுள்ளது.
மீசாலை வடக்கிலுள்ள ஆலயம் ஒன்றின் காணிக்குள் மரத்தை வெட்டும்போது மின் கம்பங்கள் மற்றும் வயர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மின்சாரத்தை துண்டிப்பதற்கான அனுமதி ஆலய நிர்வாகத்தால் பெறப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் சாவகச்சேரி மின்சார சபையால் நேற்று காலை 9.30 மணியளவில் மீசாலை வடக்கு ஊரெல்லைத் தெருவிற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு அறிவிப்பு
மரம் தறித்து முடிந்த பின்னர் பிற்பகல் 2.30 மணியளவில் மின் இணைப்பை மீள வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தும் மின் இணைப்பு மீள வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்கப்படும் எனக் காத்திருந்து பொறுமையிழந்த கிராம மக்கள் சுன்னாகம் மின் நிலையத்திற்கு பல தடவைகள் அழைப்பெடுத்து முறைப்பாடு செய்துள்ளனர்.
இருந்தும் நேற்றிரவு இரவு 7.15 மணியளவிலேயே மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், மின்சார சபையின் அசமந்த போக்கையும், பொறுப்புணர்ச்சியற்ற தன்மையையும் கண்டிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடதக்கது.