யாழ். நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி: வி. மணிவண்ணன்
வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வகையில் யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதையொழிப்பு விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது அண்மையில் வெளிவரும் பத்திரிகை செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளை அண்மை காலங்களில் பத்திரைகளில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.
பாடசாலை மாணவர்கள்
ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் எவ்வாறு பாதிக்கப்பட போகின்றார்கள் என்கின்ற அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் இருக்கக்கூடிய பெரியவர்களால் முன்வைக்கப்படுகின்றது. அதாவது போதைப்பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக பாதிக்கப்படுபவராக இருப்பவர்கள் பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறான போதைப்பொருள் விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
எதிர்கால சந்ததி என கருதப்படுகின்ற எங்களுடைய இளைஞர்கள், யுவதிகளை நோக்கி போதைப்பொருள் வர்த்தகம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.
போதைப்பொருள் பாவனை
அதற்குள்ளே அறிந்தும் அறியாமலும் அதனுடைய எதிர்கால விளைவுகளை பற்றி தெரியாது எமது இளைஞர்,யுவதிகள் இந்த போதைப்பொருளுக்குள்ளே அடிமையாகி கொண்டிருக்கின்றமை இந்த மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும். அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள் சமூகமட்ட பிரதிநிதிகள், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும். எதிர்காலத்தில் மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டம்
யாழ். மாநகர சபை முதல்வர் என்ற ரீதியில் எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுப்பது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றிணைத்து விரைவில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன்.
பல்கலைக்கழக மாணவர்கள், கல்வி சமூகத்தினர் மற்றும் பொலிஸார் ஆகிய அனைத்து தரப்பினரை ஒன்றிணைத்து எவ்வாறு போதைப்பொருட்களில் இருந்து எமது மாணவ சமூகத்தை காப்பாற்ற முடியும் என்ற விடயத்தினை அறிந்து அதனை செயல்படுத்துவதற்குரிய நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.
அத்தோடு போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கக் கூடிய விசேட நிலையம் ஒன்றினை யாழ் நகருக்கு அண்மையில் அமைப்பதற்கு யோசித்து வருகின்றோம்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் ஆகவே போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை
புனர் வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



