“தாக்குதலை நேரில் பார்தேன்” அருட்தந்தையின் காலம் கடந்த சாட்சியம் (Video)
"அன்றைய நாள் காலை எனது திருப்பணியை நிறைவேற்றிக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நடத்த குண்டு தாக்குதல் என்னால் மட்டுமல்ல யாராலும் மறக்க முடியாத ஒரு கொடுமையான எங்களது இதயங்களை பிழிந்து எடுக்கும் ஒரு சம்பவமாக அமைந்தது என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை" என அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூரமான தாக்குதலின் மூன்றாண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் ரெிவித்ததாவது,
“2019ஆம் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி மிலேச்ச குண்டு தாக்குதலினால் பலர் உயிரிழந்தார்கள். கொச்சிக்கடையில் மட்டுமல்ல மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மூன்று ஆடம்பர ஹோட்டல்கள் என்பவற்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 271பேர் உயிரிழந்ததாக நாங்கள் நம்புகின்றோம்.
இந்தநேரத்தில் இன்று உயிர்நீத்த, குண்டு தாக்குதலினால் காயப்பட்டு இருக்கின்ற எல்லோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.
அந்த சம்பவத்தின் வேதனை இன்று வரை நினைத்து நிற்பதற்கு காரணம் அந்த மிருகத்தனமான, மிலேச்சதனமான செயலுக்கான எந்தவிதமான ஒரு முடிவுகளும் எடுக்கப்படாத ஒரு நிலையைத்தான் நாங்கள் பார்கின்றோம்.
தொடர்ந்து வருகின்ற அரசாங்கங்கள் நேர்மையான ஒரு தீர்மானத்திற்கு வருவதாக தெரியவில்லை. சரியான சட்ட அணுகுமுறைகளையும் அவர்கள் தேர்த்தெடுப்பதாக தெரியவில்லை. தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவும் இப்படியான கொடுமையான மிலேச்சத்தனமான அப்பாவிகளை காவு வாங்குகின்ற சம்பவம் நடந்து விட கூடாது என்பதற்காகவும் தான் கெஞ்சி கேட்கின்றோம்” என தெரிவித்தார்.



