மெல்கம் ரஞ்சிதின் எதிர்ப்பை தடுக்க அநுர வகுத்துள்ள திட்டம்!
உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே ஏப்ரல் 21க்கு முன்னர் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்க்க வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று(31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான உண்மையை பகிரங்கப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.
இந்த மாதம் 21 ஆம் திகதிக்குள் உண்மையை பகிரங்கப்படுத்தாவிடின் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்துக்கு எச்சரிகை விடுத்திருந்தார்.
அரசாங்கத்துக்கு எதிராக பேராயர் வீதிக்கு இறங்குவதை தடுப்பதற்காகவே 21 ஆம் திகதிக்கு முன்னர் குண்டுத்தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை வெளிப்படுத்த சுபநேரம்
குற்றத்தின் உண்மையை வெளிப்படுத்த சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
இருப்பினும் அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜனாதிபதி வெளிப்படுத்தும் உண்மையில் உள்ள பொறுப்புதாரி யார் என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
