சுரேஷ் சாலே மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு.. திடுக்கிட வைக்கும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணி!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், தாக்குதல் நடந்த அன்று அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே அசாத் மௌலானாவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாகக் கூறினார்.
அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, திலீப பீரிஸ் இந்த தகவலை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.
குறித்த தொலைபேசி அழைப்பின் மூலம், காலிமுகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் இருக்கும் ஒருவரின் தொலைபேசியை எடுத்துக்கொண்டு, அவருக்கு உதவி செய்து, அவரை குறிப்பிட்ட இடத்திலிருந்து இறக்கிவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட அழைப்பு
இருப்பினும், அழைப்பில் தான் மட்டக்களப்பில் இருப்பதாக அசாத் மௌலானா கூறியதும், சுரேஷ் சாலே தொலைபேசி அழைப்பைத் துண்டித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

திலீப பீரிஸ், தெஹிவளை ட்ரொபிகல் இன் விடுதியில் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த அப்துல் லத்தீப் ஜமீல் தான் அழைப்பில் குறிப்பிடப்பட்ட நபர் என்று நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அப்போதைய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் (TID) பணிப்பாளராக இருந்த தற்போதைய கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, அந்தக் காலப்பகுதியில் அப்துல் லத்தீப் ஜமீல் ஒரு பயங்கரவாதி அல்ல என்று அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் லத்தீப் ஜமீல் தொடர்பாக, அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, 2017 நவம்பர் 08 அன்று அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஒரு விரிவான கடிதத்தை அனுப்பியிருந்தார்.
ஜமீல், ஐ.எஸ் (IS) அமைப்பின் சித்தாந்தத்தின்பால் தீவிரமாக ஈர்க்கப்பட்டவர் என்றும், 2015 ஏப்ரல் 12 அன்று சிரியாவில் உயிரிழந்த முதல் இலங்கை ஐ.எஸ் உறுப்பினர் மொஹமட் முஹுசின் நிலாமுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும், 2014 நவம்பர் 12 அன்று துருக்கிக்குச் சென்றவர் என்றும் அதில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
பயங்கரவாதி அல்ல..
மேலும், அவர் மேற்கத்தேய உணவு மற்றும் ஆடைகளை நிராகரித்து கொழும்பில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஐ.எஸ் சித்தாந்தத்தைப் பரப்பி வருவதாகவும், பிற மதத்தினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த புலனாய்வு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், பொலிஸ்மா அதிபர் 2017 நவம்பர் 09 அன்று விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அல்லாமல், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவிடம் (TID) ஒப்படைத்துள்ளார்.
அப்போதைய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஏப்ரல் 12 அன்று ஜமீல் அப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது அவர் ஷரியா சட்டத்தை விரும்புவதாகவும், ஆனால் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இல்லை என்றும், துருக்கிக்கு தனது சகோதரருடன் ஒரு கண்காட்சிக்காகச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் TID பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வருண ஜயசுந்தர, 2019 மார்ச் 06 அன்றும், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரான 2019 ஏப்ரல் 08 அன்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அதில் ஜமீல் தீவிரவாதக் கருத்துக்களைக் கொண்டவர் அல்ல என்றும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரதேசவாசிகளுடன் இணக்கமாக, அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாயமான சிசிடிவி காட்சிகள்..
இருப்பினும், இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட காலப்பகுதியிலும் ஜமீல் உள்ளிட்ட குழுவினர் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த அன்று, ஜமீல் முதலில் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்து அங்கு ஒரு தாக்குதலைத் திட்டமிட்டுள்ளார். ஆனால் குண்டு வெடிக்காததால் அது தோல்வியடைந்தது.
அதன்பிறகு, அவரது தொலைபேசிக்கு வந்த அழைப்புக்குப் பிறகு, அவர் ஹோட்டலை விட்டு வெளியேறி, ட்ரொபிகல் இன் விடுதியில் தனது பையை வைத்துவிட்டு, அசாத் மௌலானாவின் வீட்டிற்கு அருகிலுள்ள எபனேசர் மசூதிக்குச் சென்றதாக விசாரணைகளில் தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு தங்கியிருந்து வெளியே வந்தபோது, அமீர் என்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி அவரைச் சோதனையிட்டதுடன், ஜமீலின் மனைவிக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்பிறகு, ஜமீல் மீண்டும் ட்ரொபிகல் இன் விடுதிக்குச் சென்று குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்துள்ளார். ஜமீல் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறுவதற்கு முன் அவருக்கு யார் அழைப்பு விடுத்தார்கள் அல்லது அவர் எபனேசர் மசூதிக்குச் சென்றதன் நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஜமீல் தொடர்பான ட்ரொபிகல் இன் சம்பவத்தை TID விசாரித்ததும், ஜமீலின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமரா (CCTV) அமைப்பை அவர்கள் எடுத்துச் சென்ற பிறகு, ஜமீல் வீட்டிலிருந்து வெளியேறிய நேரம் முதல் புலனாய்வு அதிகாரிகள் அந்த வீட்டிற்கு வரும் வரையிலான முக்கியமான காலப்பகுதிக்கான காட்சிகளும் காணாமல் போயிருப்பதும் விசாரணைச் செயல்முறை தொடர்பாக கடுமையான சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.