அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம் : விரைவில் நடைமுறைக்கு
தேசிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பிள்ளைகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் சோதித்துக்கொள்ள உதவும் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளைச் சந்தையில் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தொடர்பான 'ரதம ஏகத' தேசிய செயல்பாடுகள் சபைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டது.
போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகள்
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட முறையில் போதைப்பொருள் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, இந்தக் கருவிகள் மருந்தகங்கள் மூலம் வழங்கப்படும்.

பாடசாலைகளில் விழிப்புணர்வுத் திட்டங்களை விரிவுபடுத்துதல், பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பை அறிமுகப்படுத்துதல் மற்றும் போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு சேவைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதிலும் இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளைத் துரிதப்படுத்துதல், தடயவியல் சோதனைகளை மேம்படுத்துதல், கடல்சார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் மறுவாழ்வுக்கான சட்டத்தை இறுதி செய்தல் ஆகியவற்றுக்கான திட்டங்களை அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது.