தீவு ஒன்றில் சிக்கியுள்ள காணாமல் போன மீனவர்கள் : டக்ளஸ் மீது குற்றச்சாட்டு (Photo)
வாழைச்சேனையில் இருந்து செப்டெம்பர் மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்
படகில் சென்றவர்கள் இரண்டு மாதமாகியும் திரும்பவில்லை என்று மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 26ம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற படகு இன்று புதன்கிழமை வரைக்கும் கரைக்கு வரவில்லை என்றும், இவர்களை மீட்டுத் தருமாறும் கடலுக்கு சென்ற மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓட்டமாவடி பாலைநகர் கிராமத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
வாழைச்சேனை மீன்பிடி துறைமுறைகத்திற்கு கடந்த மாதம் வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) கடலுக்கு சென்றவர்கள் அந்தமான் தீவில் கண்டு பிடிக்கப்பட்டதாகவும்,
அவர்களை மிக விரைவில் மீட்டுத் தருவதாகவும் உறவினர்களிடம் உறுதியளித்துச் சென்றும் இன்றுவரை (24.11.2021) குறித்த நபர்கள் வரவில்லை என்றும், எங்களுக்கு கடற்றொழில் அமைச்சர், கடல்தொழில் திணைக்களம், பிரதேச மீனவ சங்கங்கள் உரிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுத் தருவதில் அசமந்தப்போக்காக உள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த மீனவர்கள் அந்தமான்தீவில் உள்ளமை தொடர்பில் எங்களது தொலைபேசிக்கு புகைப்படங்கள் அனுப்பப்பட்டதுடன், தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் எங்களோடு அந்தமான்தீவில் உங்களது குடும்ப உறவினர்கள் உள்ளதாகவும் அவர்களை கண்ட பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த நிலையில் மீண்டும் அந்த அழைப்பை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அழைப்பை ஏற்படுத்த முடியவில்லை. எமது உறவினர்கள் அங்கு உள்ள நிலையில் அவர்களுக்கு எங்களது தொடர்பு இலக்கம் வழங்கப்பட்டு எங்களோடு தொடர்பு கொண்டார்கள்.
அந்தமான்தீவில் இருந்து 00913192245530 மற்றும் 0115299623 என்ற இலக்கத்தின் மூலம் தொலைபேசி அழைப்பு வந்து தங்களது உறவினர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு விசாரணை செய்தனர். இதன் பின்னர் தொடர்பு இல்லாமல் உள்ளமைக்கான காரணம் என்ன என்று இன்னும் தெரியவில்லை என மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தமான்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மீனவர்கள் தற்போது எங்கே? அந்தமான்தீவு கடல் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவினர்கள் அங்கிருந்து படகுடன் எங்கு கொண்டு செல்லப்பட்டனர். அரசாங்கம் எங்களை ஏமாற்றுகின்றதா? அல்லது கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் கரிசனை கொள்ளாமல் உள்ளாரா? என்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே கடற்றொழில் அமைச்சர், கடல்தொழில் திணைக்களம், பிரதேச மீனவ சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு மாதமான நிலையில் எங்களது உறவினர்களை உடனடியாக கண்டு பிடித்து தருமாறும், உங்களது கதைகளை நம்பியே நாங்கள் இரண்டு மாதமாக எங்களது உறவுகள் மீண்டும் வருவார்கள் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நான்கு மீனவர் சென்ற குறித்த படகு நீலநிறம் என்றும் அதன் இலக்கம்; IMUL A 0093 Tle என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.வி.ரிஸ்கான் (வயது 21), வாழைச்சேனையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம்.எச்.முஹம்மட் கலீல் (வயது 49), வாழைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.றியாழ் (வயது 19), வாழைச்சேனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஹைதர் (வயது 41) ஆகிய மீனவர்களே இன்று வரை கரை திரும்பவில்லை உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



