யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு விவகாரம்.. கொழும்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, நாட்டில் மீண்டும் ஒரு இனவாத அலையை உருவாக்குவதற்கு சில குறுகிய குழுக்கள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், "இனவாதத் தீயை மூட்டி எங்கள் ஒற்றுமையைக் கருக வைக்காதீர்" என நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைப் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 'வெசாக் கூடு' என்பது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தே உருவாக்கிய ஒன்றாகும் என்றும், நாட்டில் நிலவும் இனவாதப் போக்குக்கு கூட்டுப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அனைத்து மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கெடுத்திருந்தனர் என்றும் அழைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் இந்த ஒற்றுமையைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிறிய குழுவினரே இச்சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டுள்ளார்களே தவிர, இது ஒட்டுமொத்த சிங்கள அல்லது தமிழ் மாணவர்களின் செயல் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அடிப்படை வசதிகளின்றி இயங்கிய இல்லம்..! 12 பேர் உயிர் பலி - பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அரசியல் சூழ்ச்சி
எனவே, இவ்வாறான குறுகிய அரசியல் சூழ்ச்சிகளுக்குள் சிக்கி யாரும் கலக்கமடைய வேண்டாம் என்றும், அனைவரும் நிதானமாகச் சிந்தித்து அமைதியைக் கடைப்பிடிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மேலதிக கொடுப்பனவு மற்றும் விடுதிப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து அரசு சாதகமான பதிலளித்துள்ளதாகவும் சசிந்து பெரேரா தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது அன்றாடப் பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு மேலதிக நிதித் தேவைப்படுவதைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'மஹாபொல' புலமைப்பரிசிலுக்கு மேலதிகமாக 5,000 ரூபாவை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த சாதகமான பதில் என்பதால், இந்நடவடிக்கையைத் தாம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாகப் பல்கலைக்கழகங்களில் நிலவி வரும் விடுதிப் பற்றாக்குறைக்கு, மாணவர் அமைப்புகள் கொடுத்த தொடர் அழுத்தங்கள் காரணமாக தற்போது சாதகமான முடிவுகள் எட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், உயர்தொழில்நுட்பவியல் தேசிய நிறுவன கல்வி முறைமையிலும் விடுதிப் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும், பல்கலைக்கழக கட்டமைப்பில் திட்டமிடப்பட்டுள்ள 55 விடுதிகளில் முதற்கட்டமாக 13 புதிய விடுதிகளைக் கட்டும் பணிகளை கல்வி அமைச்சு இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனங்களை பிரித்து வைத்து அரசியல் இலாபம் தேட நினைக்கும் இனவாதக் குழுக்களின் தூண்டுதல்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களோ அல்லது பொதுமக்களோ பலியாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.