மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்! - நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டு மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் எனவும், இவ்வாறான உலக தொற்று நோய் நிலைமையில் நாட்டின் அரசாங்கமானது உலகில் அங்கீகரிக்கப்பட்ட உயர் மட்டத்திலான ஊசி மருந்தை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் வீராப்புக்கு நாட்டு மக்களின் உயிர் பழியல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை அங்கீகரிக்காத ஊசி மருந்த அரசாங்கம் வழங்கத் தீர்மானித்தால், அது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தும். கோவிட்டுக்காக உலகில் தற்போது கண்டறியப்பட்டுள்ள ஒரே தீர்வு ஊசி மருந்து மாத்திரமே.
கோவிட் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களைக் கட்டுப்படுத்த ஒரே தீர்வு ஊசி மருந்து. அந்த ஊசி மருந்தைத் தயாரிக்கும் போது, அதனை அறிவியல் ரீதியாகச் செய்ய வேண்டும்.
அது மிகவும் சிரமமான நீண்டகால செயற்பாடு. எந்த ஊசி மருந்தாக இருந்தாலும் முதலில் அதனைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். பரீட்சித்துப் பார்த்த வெற்றி கிடைத்தால் மாத்திரமே அதனைப் பயன்படுத்த முடியும். பல கட்டங்களாக அந்த பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்திடம் சான்றிதழைப் பெற வேண்டும்.
சான்றிதழ் கிடைத்தால் மாத்திரமே மக்களுக்கு அதனை வழங்க முடியும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
