"வீட்டு முன் சண்டையிட வேண்டாம்" எனக் கூறிய மூன்று பிள்ளைகளின் தந்தை வெட்டிப் படுகொலை - பாணந்துறையில் பயங்கரம்
களுத்துறை, பாணந்துறை - பின்வத்தைப் பிரதேசத்தில் தனது வீட்டின் முன்பாக சண்டையிட வேண்டாம் என அண்டை வீட்டுக்காரரை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பின்வத்தை, லெஸ்லி குணவர்தன மாவத்தையைச் சேர்ந்த 42 வயதான சம்பத் சில்வா என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடும் வாக்குவாதம்
நேற்று மாலை உயிரிழந்தவரின் வீட்டின் முன்பாக மூன்று நபர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது தனது வீட்டிலிருந்து வெளியே வந்த சம்பத் சில்வா, வீட்டின் முன் நின்று சண்டையிட வேண்டாம் என அவர்களைக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அண்டை வீட்டுக்காரர், உடனடியாகத் தனது வீட்டுக்குள் சென்று வாள் ஒன்றை எடுத்து வந்து, சம்பத் சில்வாவின் கழுத்துப் பகுதியில் பலமாக வெட்டியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த அவரை, குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் இணைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனை வட்டாரங்கள்
எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும் அவருடன் இருந்த ஏனையோரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குற்றத்தைச் செய்த கையோடு அவர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பின்வத்தைப் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.