வெளிநாடுகளுக்கு கசியும் டொலர் வருமானம் - ஹர்ஷ வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அதற்கேற்ப வருமானம் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கவலை வெளியிட்டுள்ளார்.
இதனை அவர் "சுற்றுலா முரண்பாடு" (Tourism Paradox) என வர்ணித்துள்ளார். அத்துடன் சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், அனுமதிப்பத்திரமின்றி சிற்றுண்டிச்சாலைகள் (Cafes), மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்திற்கான வரி வருமானம்
இவ்வாறான சேவைகளுக்கான கொடுப்பனவுகள் வெளிநாடுகளிலேயே செலுத்தப்படுவதால், அந்த பணம் இலங்கைக்கு வராமல் வெளிநாடுகளுக்கே கசிகின்றது.
இச்செயற்பாடுகளால் உள்ளூர் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய வரி வருமானமும் இழக்கப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.

குறைந்த செலவில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் பிரபலமான இடங்களில் அதிகளவில் குவிந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இதனால் சிகிரியா, யால போன்ற இடங்கள் நெரிசலுக்குள்ளாகி வருவதுடன், கடற்கரைகள் மாசடைந்து வருகின்றன. இவ்வாறான கட்டுப்பாடற்ற சுற்றுலா முறையினால் நாட்டின் கலாசார மற்றும் சுற்றுச்சூழல் சொத்துக்கள் அழிவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் முதலீடுகளை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து வணிகர்களும் உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெற்று, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, முறையாக வரி செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட சேவையின் தரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நிலையான சுற்றுலா முறையை நோக்கி இலங்கை நகர வேண்டும். சுற்றுலாத்துறையின் நீண்டகால இருப்பு மற்றும் தேசிய வருமானத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உடனடியாக முறையான சட்டக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
பாண்டி திருமண பிரச்சனையில் நிலா சோழனுடன் வாழ்வது குறித்து எடுத்த அதிரடி முடிவு... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam