தமிழர் அரசியலை பலவீனப்படுகிறதா கனேடிய நீதிமன்ற தீர்ப்பு..!
கனடா நீதிமன்ற தீர்ப்பை முன்னிறுத்தி தமிழர் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கக் கூடாது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர், இன்று(30.08.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதிக்கான நீள் பயணம் எனும் தொனிப் பொருளில் இனப்படுகொலையின் ஒர் அங்கமான வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயமாக தமிழர் தாயகத்தில் சர்வதேச மாநாடு நடக்க இருக்கையில், கனடாவில் நீதிமன்றம் ஒன்றில் இலங்கையில் இனப்படுகொலை நிகழவில்லை என தீர்ப்பு வழங்கியதாக சமூக ஊடகங்களில் வந்துள்ள செய்தியை தொடர்ந்து பௌத்த அரசுக்கும் அதன் காவலாளிகளுக்கும் மகிழ்வை கொடுக்கலாம். ஆனால் பௌத்த தர்மம் தமது தண்டனை தீர்ப்பை எப்போதோ எழுதிவிட்டது.
அதனை தெற்கு உணரும் நாளிலேயே நாடு உண்மையான விடுதலை மகிழ்வை காணும் என்பதையும் குறிப்பிடுகின்றோம்.
கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு
கனடா நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வருடம் (2025) மார்ச் மாதம் வழங்கப்பட்டதாக செய்தி வந்துள்ள நிலையில், அது ஒரு வருடம் கடந்து இலங்கைக்கு செய்தியானது ஏன்? செய்தியாக்கப்பட்டதன் பின்னணி என்ன? அதன் அரசியல் இலக்கு என்ன? இடங்கையில் அடுத்த ஜனாதிபதிக்கான போட்டி கனடாவில் ஆரம்பித்து விட்டதா? போன்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.

இலங்கையில் இடப்படுகொலை நிகழ்ந்தது என்பதை நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது தீர்ப்பினை இறுதியாக 2022 ஜெர்மன் நாட்டில் பேர்லினில் கூடிய போது அறிவித்தது.
அதற்கு முன்னர் இது முதலாவதாக 2010 டப்லினிலும் தொடர்ந்து பிரீமனிலும் கூடி தனது முடிவுகளை அறிவித்த நிலையிலேயே மூன்றாவது தடவையாக ஜெர்மனியில் நடந்த தீர்ப்பாயத்தின் போது இந்தியா உட்பட மேற்குலக நாடுகளையும் குற்றவாளி நாடுகளாக அடையாளப்படுத்தியது.
இதற்கு முன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2013 மார்ச் 27ஆம் திகதியும், 2015 செப்டம்பர் 16ஆம் திகதியும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என தீர்மானம் நிறைவேற்றியதை நாம் மறந்து விடக்கூடாது. அத்தோடு இலங்கையின் வட மாகாண சபை 2015 பெப்ரவரி 10ஆம் திகதி அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியதையும் நாம் அறிவோம்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, இலங்கை வடமாகாண சபை என்பன அரசியல் சார்ந்த ஒன்றாக இருந்தாலும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உலகில் புகழ்பெற்ற இடதுசாரி சட்ட வல்லுநர்களால் சாட்சியங்கள் முறையாக ஆராயப்பட்டு விசாரிக்கப்பட்டு வழங்கிய தீர்ப்பாகும், அது ஒடுக்கப்படும் மக்கள் இனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்ப்பாகவே உள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்தது என ஆணித்தரமாக தெற்கில் கூறும் அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு விசாரணை நடாத்த உள்ள நிலையில் அதற்கு முகம் கொடுக்கவும், தமிழர் தாயக மக்களை தேசிய அரசியலில் ஒருமுகப்படுத்தவும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, வட மாகாண சபை மற்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய முடிவுகளை மக்கள் மையப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய அரசியல் களத்தில் இருக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் சிவில் சமூகத்திற்கும் உள்ளது.
கனடா நீதிமன்ற தீர்ப்பினை கையில் எடுத்து இலங்கை சிங்கள பௌத்த பேரனவாதம் சிலிர்த்துள்ள நிலையில் அதற்கு முகம் கொடுக்கவும் தமிழர் தேசம் தம்மை அரசியல் ரீதியில் பலப்படுத்தவும் நமது அரசியல் இலக்கை அடைய முடியும் போராட்டத்தை வலுப்படுத்தவும் வேண்டும்.
இல்லையெனின், அடுத்த முள்ளிவாய்க்காலை நோக்கி பயணிப்பவர்களாக இருப்போம் என்பதை மீண்டும் நினைவு கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் குதித்த மக்கள் - அடையாளம் தெரியாத நபரால் ஏற்பட்ட குழப்பம்