முன்னாள் ஜனாதிபதி கூறிய இரகசியத்தை வெளியிட்ட மருத்துவர் பாதெனிய
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட போது தன்னிடம் விசேட விடயம் ஒன்றை கூறியதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
கமத்தொழில் அமைச்சை சேர்ந்த சிலர் இரசாயன உர நிறுவனங்களை தாங்கி வாழ்வதாகவும் அதனை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன கமத்தொழில் அமைச்சராக இருந்த பின்னர் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரயாடலின் போது, “ டொக்டர் நீங்கள் தனியார் மருத்துவப் பயிற்சிகளை மாலை 4 மணிக்கு பின்னர் செய்கிறீர்கள், நான் பதவி வகித்த முன்னாள் அமைச்சின் அதிகாரிகள் காலையில் இருந்தே தனியார் பயிற்சிகளை செய்கின்றனர்” எனக் கூறியதாக பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.
கமத்தொழில் அமைச்சில் தான் கலந்துக்கொண்ட பேச்சுவார்த்தை ஒன்றிலும் தான் இதனை உணர்ந்ததாகவும் அந்த அமைச்சின் சில அதிகாரிகள் மற்றவர்கள் கூறுவதை கூட கேட்க தயாராக இல்லை.
கமத்தொழில் சேவை அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் கூட இரசாயன உர நிறுவனங்களால் வழங்கப்பட்டவை எனவும் பின்னர் அவை நீக்கப்பட்டதாகவும் மருத்துவர் பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.