புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் - வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் மீறித் திறக்கப்பட்டால் ஊழியர்கள் பணிக்குச் செல்வதைப் புறக்கணிக்குமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பாரிய கோவிட் கொத்தணி உருவானதைத் தொடர்ந்து கடந்த 13-05-2021 முதல் ஆடைத்தொழிற்சாலை மக்களின் எதிர்ப்பு காரணமாக நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிகரித்த கோவிட் கொத்தணி காரணமாகக் கடந்த 17-05-2021 முதல் ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி உள்ளடங்கலாக 9 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டு இன்று வரை முடக்க நிலையில் உள்ளது.
இவ்வாறான நிலையில் நாளை(07) ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை பணிக்கு வருமாறு நிர்வாகம் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் சற்று முன்னர் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினர். இங்கு கருத்து தெரிவித்த புதுக்குடியிருப்பு வர்த்தகசங்கத் தலைவர் தர்மலிங்கம் நவநீதன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தற்போது கோவிட் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றது. இது அனைவரும் அறிந்த உண்மை. ஒருவர் உயிரிழந்துள்ளார். 9 கிராம சேவை பிரிவுகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு முடக்கப்பட்ட நிலையில் இருக்கின்ற நிலையில், நாளையதினம் இந்த ஆடைத்தொழிற்சாலை மீண்டும் இயங்க இருக்கின்றதான செய்தி கிடைத்துள்ளது. ஆடைத்தொழிற்சாலையில் உள்ள பணியாளர்களுக்கு நாளைக்கு பணிக்கு வருமாறு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
அவ்வாறு இவர்கள் பணிக்கு வரும் இடத்தில் மீண்டு ஒரு பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த தொற்றானது இந்த ஆடைத்தொழிற்சாலையில் இருந்தேதான் பரவியது. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 15 பேருடன் தொடங்கிய தொற்று இன்று 600 ஜ கடந்து நிற்கின்றது.
நேற்று முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. 9 கிராமங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த பிரதேசங்களில் வாழ்கின்ற இளைஞர்கள் யுவதிகளை அழைத்து பணியினை மேற்கொள்வது என்பது வருந்தத்தக்க விடயம்.
இந்த கொத்தணிக்கே எங்களால் முடிவு காணப்படவில்லை. இன்னுமொரு கொத்தணியினை உருவாக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஊரில் வாழ்கின்ற சமூக ஆர்வலர்கள், அரச பணியாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் முதலில் கவனம் எடுத்து புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையினை இன்னும் 14 நாட்களுக்கு பின்னர் ஆடைத்தொழிற்சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்திய பின்னரே திறக்கவிடுவது பொருத்தமானதாக இருக்கும்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 350 வர்த்தகர்களைக் கொண்ட பெரிய சங்கம். இந்த சங்கமானது இன்று முற்று முழுதாக முடக்கப்பட்டு புதுக்குடியிருப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் முடக்கமான நிலையில் முடங்கி இருப்பதற்குக் காரணமான கோவிட் கொத்தணியினை உருவாக்கிய இந்த ஆடைத்தொழிற்சாலை அதற்கு எந்த பொறுப்பும் கூறாது மீண்டும் அதனை இயக்க நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே இந்த ஆடைத்தொழிற்சாலை இயக்குவது குறித்து அதன் நிர்வாகம் இயக்கும் நடவடிக்கை தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
கொழும்பு, கண்டி, கம்பஹா மாவட்டங்களிலிருந்துதான் இங்கு வேலைக்கு வருகின்றார்கள். அவர்கள் கூட தனிமைப்படுத்தப்படாத நிலையில் தான் பணிக்கு வந்து செல்கின்றார்கள். இன்னிலையில் அனைவரும் கவனிக்க வேண்டும், எமது பிரதேசம் அழிந்து செல்வதை நாங்கள் ஒவ்வொருவரும் விரும்பவில்லை.
ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களே உங்களை வேலையிலிருந்து நிறுத்துவார்கள் என்று நீங்கள் நினைப்பது தவறு. உங்களை விட்டால் இவர்களுக்கு வேறு ஆட்கள் இல்லை, வேறு இடங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவரமுடியாது.
நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினையும் பாதுகாத்து இந்த கிராமத்தினையும் பாதுகாக்கும் பொறுப்பு உங்கள் கையில் இருப்பதால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அதாவது ஆடைத்தொழிற்சாலை முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு கோவிட் தொற்று நீங்கும் வரையும் நீங்கள் பணிக்குச் செல்லவேண்டாம் என்று புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் சார்பில் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
இவர்கள் உங்களை பணியிலிருந்து நிறுத்த முடியாது. அதிகாரிகளின் மிரட்டல்களுக்கு அஞ்சாதீர்கள் அங்குள்ள அதிகாரிகள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் எங்கள் கிராமத்தினையும் பிரதேசத்தினையும் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை ஆகும்.
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், நீங்களும் உங்கள் உறவுகளின் உயிர்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் வேலையினை பற்றிச் சிந்தியுங்கள். எனவே ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் அன்பு சகோதர சகோதரிகளே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் பணிக்குச் சென்று மக்களை அழிக்கும் பழிக்குத் துணையாக இருந்து விடாதீர்கள்.
அரசாங்கத்திற்கும் ஒரு செய்தியினை சொல்லி நிற்கின்றோம். ஜனாதிபதி அவர்கள் ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தொற்று உள்ள ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கச் சொல்லி ஜனாதிபதி எந்த இடத்திலும் சொல்லவில்லை.
ஆகவே அரச அதிகாரிகளே தவறான இந்த தகவல்களைப் பரப்பி தவறான முறையில்
அனுமதிகளை வழங்கி இந்த பிரதேசத்தினை சூழலை இக்கட்டான நிலைக்குக் கொண்டு
வருவீர்களாக இருந்தால் ஆடைத்தொழிற்சாலையினால் பாதிக்கப்பட்ட எமது வர்த்தகமானது
மீண்டும் நாங்கள் கடைகளைத் திறந்து ஆரம்பிக்கப்படவேண்டிய நிலை வரும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.