வவுனியாவில் நிகழ்நிலை மூலம் பதிவு செய்து வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம்
வவுனியாவில் பெட்ரோல் விநியோகத்தை சீராக ஒழுங்கமைக்கும் வகையில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் எரிபொருள் விநியோக அட்டைகளை வழங்கி நிகழ்நிலை மூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இராணுவ அதிகாரிகள், பொலிசார், திணைக்கள தலைவர்கள், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஆகியோருடன் நேற்று(19) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பெட்ரோல் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் முகமாக பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து விசேட நடைமுறை ஒன்று பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலையில் பதிவு
அதன் அடிப்படையில் அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் அட்டைகள் வழங்கப்பட்டு அதனை நிகழ்நிலையில் பதிவு செய்து வாரத்திற்கு ஒரு தடவை எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாகன இலக்கங்களுடன் நிகழ்நிலையில் பாதுகாப்பு தரப்பினர் பதிவு செய்யவுள்ளனர் எனவும் சிலர் அதிகளவு பெட்ரோலை பல எரிபொருள் நிரப்பு நிலைங்களில் பெற்று விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், நேற்றைய தினம் பெட்ரோல் சிட்டைகள் வழங்கப்பட்டவர்களுக்கு நிகழ்நிலையில் பதிவு செய்து எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மாஃபியாக்கள்
அத்துடன் இந்தவாரம் முதல் பெட்ரோல் அட்டைகள் வவுனியாவிலும் விநியோகிக்கப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் தற்போது பெட்ரோல் 800 தொடக்கம் 1500 ரூபாய் வரையிலும், டீசல் 800 ரூபாய்க்கும் சில எரிபொருள் விற்பனை மாஃபியாக்களால் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் பெட்ரோலுக்காக காத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் இச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் இது நடைமுறைப்படுத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.