மாவீரர் தினத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சாவகச்சேரி நீதிமன்றம் (VIDEO)
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களை வட்டுக்கோட்டை, இளவாலை, அச்சுவேலி, சுன்னாகம், கோப்பாய், தெல்லிப்பழை, மானிப்பாய் மற்றும் மற்றும் காங்கேசன்துறை நீதிவான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து கட்டளையிட்டன.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற எல்லைக்குள் உள்ள இரண்டு பொலிஸ் நிலையங்களின்
பொறுப்பதிகாரிகள், மல்லாகம் நீதிவான் நீதிமன்ற எல்லைக்கு உள்பட்ட 8 பொலிஸ்
நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற எல்லையில் உள்ள
3 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளினால் இந்த விண்ணப்பங்கள்
சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
சாவகச்சேரி
மாவீரர் தினத்துக்குத் தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து
சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி பொலிஸாரால் கிஷோர் உட்பட 13 பேருக்கு எதிராகவும், கொடிகாமம் பொலிஸாரால் கிஷோர் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன், பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும், இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் தொடர்பாகத் தெளிவாக அறிந்திருப்பார்கள்.
எனவே அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.
ஆனால் பெயர் குறிப்பிட்ட நபர்களும், ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.
அதனால் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று குறித்த நபர்களுக்கு எதிராகத் தடை உத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்துக் குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.
குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாகச் சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி சதீஸ்வரன், சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.
மல்லாகம்
ஐம்பது பேருக்கு மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்க கோரி எட்டு பொலிஸ் நிலையங்களினால் மல்லாகம் நீதிமன்றுக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான், தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு நியாதிக்கம் இல்லை எனத் தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் அவர்கள் இலங்கையின் சட்டதிட்டங்களை மீறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
குறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பாகச் சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சட்டத்தரணி மணிவண்ணன், சட்டத்தரணி திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுபாஷ் ஆகியோர் முன்னிலையாகினர்.
பருத்தித்துறை
மாவீரர் தினத்துக்குத் தடை விதிக்குமாறு கோரி வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸார் இணைந்து பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
எழுவருக்கு மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்க கோரி மூன்று பொலிஸ் நிலையங்களினால் பருத்தித்துறை நீதிமன்றுக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான், எந்தவிதமான கட்டளையையும் வழங்க முடியாது என அவர்களது கோரிக்கையை நிராகரித்து வழக்கினை தள்ளுபடி செய்தார்.
அத்துடன் குறித்த எழுவரும் ஏதாவது குற்றமிழைத்தால் பொலிஸ் தண்டனை சட்டத்தின் கீழோ அல்லது வேறு சட்டங்களின் கீழோ அவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்து நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் 29ஆம் திகதி இது தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கில் தொடர்புடையவர்கள் சார்பாகச் சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சட்டத்தரணி திருக்குமரன், சட்டத்தரணி குகதாசன் மற்றும் சட்டத்தரணி ராஜினி நடராசா ஆகியோர் முன்னிலையாகினர்.