நெல் மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடையே கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட நெல் மொத்த வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் தலைமையிலான அதிகாரிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(8) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றுள்ளது.
கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நெல்லை அளவுக்கதிகமாக களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 16 களஞ்சியசாலைகள் பரீசிலிக்கப்பட்டதுடன், அங்கிருந்த 2400 மெட்ரிக் டொன் அரிசி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் இனங்காணப்பட்டுள்ளதுடன் அக்களஞ்சியசாலைகளுக்கு முத்திரையும் பதிக்கப்பட்டதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்நடவடிக்கையின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 380 மெட்ரிக் டொன் நெல் நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு உரியவர்களால் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்னும் ஆறு வர்த்தகர்கள் 293 மெட்ரிக் டொன் நெல்லை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு தங்களுடைய விருப்பத்தை ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.
மேலும் முத்திரையிடப்பட்ட 2400 மெட்ரிக் டொன் நெல்லினுள் 1800 மெட்ரிக் டொன் அளவான நெல்லை அவர்கள் அரசாங்க நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்கு தங்களுடைய விருப்பத்தை இதன்போது பூரணமாகத் தெரிவித்தனர்.
மேலும் தங்களது விதைநெல் அதைப்போன்று உணவுக்கு அவசியமான நெல் சாதாரணமான முறையில் அவர்களுக்குக் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்து கொண்டு மேலதிகமாக இருந்த நெல்லை இவ்வாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கத் தயார் என இதன்போது கலந்து கொண்ட நெல் மொத்த வியாபாரிகள் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தனர்.
அதற்கிணங்க அவர்களது நியாயமான கோரிக்கை மீது கவனம் செலுத்திய அரசாங்க அதிபர் அதற்கேற்றாற்போல் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
குறித்த களஞ்சிய சாலைகளில் இருக்கக்கூடிய நெல் அரச நெல் சந்தைப்படுத்தல் சபைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். அதேபோன்று இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சீனி மொத்த வியாபாரி ஒருவர் தம்மிடம் இருக்கக்கூடிய சீனி இருப்புத் தொகையை நியாயமான முறையில் அனைத்து வியாபாரிகளுக்கும் அதேபோன்று சில்லறை வியாபாரிகளுக்கும் விநியோகிக்க உள்ளதாகவும் அச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர்.ஜயரத்ன ,பிரதேச செயலாளர்கள் நெல் மொத்த வியாபாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


