வன்னி பிரதேச பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்
வன்னி பிரதேச பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான்(Kader Masthan) தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்குக் குறைவான மாணவர்கள் கல்வி பயில்கின்ற பாடசாலைகளை 2021.10.21 ஆம் திகதி மாணவர்களின் பாடசாலை கல்வியை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற வேலைத்திட்டத்திற்கமைய வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கலந்துரையாடலே நேற்று மாலை (14.10) குருமன்காட்டில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது மீள ஆரம்பிக்க இருக்கின்ற பாடசாலைகளை சிரமதானம் செய்வது சம்பந்தமாகவும், கோவிட் 19 காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன.
அத்துடன், 21 ஆம் திகதி 200 மாணவர்களுக்குக் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற அதிபர், ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கட்சி தலைமையகத்தின் அறிவுறுத்துதலுக்கமைய இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி தலைமையகத்தின் பிரதிநிதிகள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.