கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்ற தமிழ் பெண்
அகிலா கனகசூரியம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நேற்றைய தினம் (02.01.2023) கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரிடம் நேற்றைய தினம் தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக் கொண்ட அகிலா கனகசூரியம் கிழக்கு மாகாண கல்வி அலுவலகத்தில் முதலாவது கையொப்பத்தினை இட்டு தமது கடமைகளை சுபவேளையில் ஆரம்பித்துள்ளார்.
பதவி ஏற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, கிழக்கு மாகாண நிர்வாக அதிகாரிகள், கல்வி நிர்வாக அதிகாரிகள், மாகாண கல்வித்துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கல்வி நிர்வாக சேவையில் 24 வருடங்கள்
இலங்கை அரச சேவையில் பல்வேறு பதவி நிலைகளில் கடமை புரிந்துள்ள இவர் ஆசிரியையாக, வலயக் கல்வி பணிப்பாளராக, மாகாண கல்வித் திணைக்கள பிரதி திட்டமிடல் பணிப்பாளராக கடந்த காலங்களில் பணியாற்றியுள்ளார்.
தனது ஆசிரியர் சேவையினை தொடர்ந்து கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் 24 வருடங்களாக கல்வி நிர்வாக சேவையில் சேவையாற்றி வருவதோடு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நீண்ட காலமாக திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
2016ம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் தான் வலயக்கல்வி அதிகாரியாக கடமையாற்றிய வலயங்களின் கல்வித்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார்.



