அவை நடுவில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்ட திலிப் வெதஆராச்சி
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு வரவு செலவுத்திட்டத்தில் தீர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சி இன்று அவை நடுவில் அமர்ந்து எதிர்ப்பில் ஈடுபட்டார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய பின்னர், அவை நடுவுக்கு வந்து அவர் கீழே அமர்ந்துக்கொண்டார்.
மீன்களை பிடித்து வரும் மீனவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை
முன்னதாக வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பல நாட்கள் கடலுக்குள் சென்று மீன்களை பிடித்து வருகின்றன.எனினும் மீன்களை பிடித்து வரும் மீனவர்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை.
21 ஆம் திகதி தேசிய மீனவர் தினத்தில் மீனவர்கள் அனாதரவாக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு கப்பல்கள் வந்து இலங்கை கடல் எல்லைக்குள் மீன்களை கொள்ளையிடுகின்றன.
சீனாவில் இருந்து இரகசியமாக லின்னா மீன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், மீனவர்கள் பிடிக்கும் மீன்களை விற்பனை செய்ய முடியாதுள்ளது.
இது சம்பந்தமாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு அறிவித்து, ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தினேன். மீன்பிடி அமைச்சர் விடயத்தை ஒப்புக்கொண்டார் என திலிப் வெதஆராச்சி நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவை நடுவில் சென்று அமர்ந்த திலிப் வெதஆராச்சி
உரையின் பின்னர் கருத்து வெளியிட்ட வெதஆராச்சி, நாடாளுமன்ற கூட்டம் முடியும் வரை அவை நடுவில் அமர்ந்தும் உபவாசம் இருக்க போவதாக கூறி, அவை நடுவில் சென்று அமர்ந்துக்கொண்டார்.
அப்போது அவை தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன், நாடாளுமன்றத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக சென்று ஆசனத்தில் அமருமாறு கோரினார்.
இதனையடுத்து சுமார் 10 நிமிடங்கள் அவை நடுவில் அமர்ந்திருந்த திலிப் வெதஆராச்சி எழுந்து சென்று ஆசனத்தில் அமர்ந்துக்கொண்டார்.