விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டீசல் வழங்கி வைப்பு
அளம்பில் கமநல சேவை திணைக்கள அதிகாரியின் கோரிக்கைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் மற்றம் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் முல்லைத்தீவு முள்ளியவளையில் உள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் தருவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
டீசலினை பெற்றுக்கொள்வதற்காக வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் டீசலினை வழங்குவதற்கு முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் முன்வந்துள்ளனர்.
அளம்பில் கமநலசேவைத்திணைக்கள அதிகாரியின் கண்காணிப்பில் விவசாயிகளின் பெயர் விபரங்கள் பெறப்பட்டு டீசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
விவசாயிகளுக்கு தேவையான டீசல் வழங்கிவைப்பு
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் கரியல்வெளி,ஆற்றங்கடவை அணைக்கட்டு,01ஆம் கண்டம், குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 1217 ஏக்கரில் வயல் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா 10 லீற்றர் வீதம் அறுவடை செய்வதற்கு தேவையான டீசல் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் அறுவடைக்குதேவையான டீசலினை முள்ளியவளை லங்கா ஐ.ஓ.சி ஊடாக வழங்கியமைக்கு விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள். தொடர்ந்தும் ஏனைய விவசாயிகளுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபோக நெற்செய்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் எதிர்வரும் காலத்தில் அறுவடைக்கு தயாராகி வருகின்றார்கள்.
அந்த வகையில் அளம்பில் கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு
குளத்தின் கீழ் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் இன்னும் சில வாரங்களில்
அறுவடைசெய்யவுள்ள நிலையில் விவசாயிகள் டீசலை பெற்றுக்கொள்வதில் பாரிய
சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.