கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்க இயலாதா?: சபா குகதாஸ்
கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளை பெற முற்படுவது போல ஏன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கி தமிழ் முதலீட்டாளர்களை அழைக்கும் நல்லெண்ண வெளிப்பாட்டை கோட்டாபாய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை இனவாதமா? பிரிவினைவாதமா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வினவியுள்ளார்.
அவர் நேற்று(30) வெளியிட்ட உடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டதால் அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டார்நாட்டிற்கு சென்று உதவி கோர முற்பட்டுள்ளார்.
கட்டார் அரசாங்கம்
இதன்போது கட்டார் அரசாங்கம் 2019 ஆண்டு கட்டார் சேரிட்டி அமைப்பை இலங்கை அரசாங்கம் பயங்கரவாத பட்டியலில் தடை செய்தமையை நீக்க வேண்டும் என கோரியுள்ளது.
இதன் வெளிப்பாடாக தடையை நீக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கட்டார் சேரிட்டி அமைப்பின் தடையை நீக்கி நல்லெண்ண அடிப்படையில் எரிபொருளை பெற முற்படுவது போல ஏன் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கி தமிழ் முதலீட்டாளர்களை அழைக்கும் நல்லெண்ண வெளிப்பாட்டை கோட்டாபாய அரசாங்கம் மேற்கொள்ளவில்லை இனவாதமா? பிரிவினைவாதமா? என வினவியுள்ளார்.
புலம்பெயர் தமிழர் அமைப்பு
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் முதலீட்டாளர்கள் என்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம் ஆனால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் கழிந்தும் பொருளாதாரத்தில் மிக பெரும் கீழ் நிலையை நாடு அடைந்ததுள்ளது.
அது மாத்திரமன்றி பிச்சை கூட எடுக்க முடியாத அவல நிலையிலும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் தடைகளை நீக்கி இன பிரச்சினைக்கு நியாயமான தீர்வுகளை காண முயற்சிக்க விரும்பவில்லை என்றால் நாடு அழிந்தாலும் இனவாதத்தை கைவிடமாட்டோம் என்பது தானா?
ஆனால் இந்த நாடு எதிர் காலத்தில் மீண்டெழ வேண்டுமாக இருந்தால் புலம்பெயர்
தமிழர் அமைப்புக்களின் தடைகளை நீக்கி தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை தீர்வு
காண்பதன் மூலமே சாத்தியமாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.