இந்திய-இலங்கை மீன்பிடி பிரச்சினை குறித்து மோடியுடன் விரிவான கலந்துரையாடல்
அண்மையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை-இந்திய மீன்பிடி பிரச்சினை குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில், ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த கலந்துரையாடல்களின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி எதனையும் தெரிவிக்கவில்லை.
கடல் வளங்கள்
இலங்கையின் கடல் வளங்கள், இலங்கை மக்களுக்கு சொந்தமானவை, எனவே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடல் எல்லையில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இலங்கை கடற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை பேசாலை பகுதியில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து அவர் கவலைகளை எழுப்பினார், சட்டவிரோத படகுகள் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.