சாந்தபுரம் கிராமத்தில் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்கள்
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த கிராம இளைஞர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இவை இனங்காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் சிலர் கடமையின் பொருட்டு கிராமத்திற்குள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்கள் மற்றும் கசிப்பு பாவனையாளர்கள் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அவதூறாகப் பேசியமை போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் களத்தில் இறங்கி நடவடிக்கையினை மேற்கொண்ட போதே விற்பனைக்குத் தயாராக இருந்த கசிப்பு பைகற்றுகள் மற்றும் கொள்கலன்கள் என்பன கைப்பற்றப்பட்டதோடு அவை தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.