இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளருக்கு விளக்கம்
பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம் பற்றிய விடயங்களை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கம் எடுத்த முயற்சிகள் குறித்து அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆரியசின்ஹ அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளருக்கு விளக்கமளித்துள்ளார்.
2021, செப்டம்பர் 07 ஆம் திகதி இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகள் குறித்த அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகள் மற்றும் பரந்த அளவிலான சிவில் சமூகத்துடன் ஈடுபாடு பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.
கோவிட் நெருக்கடியின் போது, குறிப்பாக தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியபோது, இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆரியசின்ஹ நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இலங்கை உறவின் பன்முகத் தன்மையை வலியுறுத்திய தூதுவர், இரு நாடுகளும் குறிப்பாக வலுவான வர்த்தகம், மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய துறைகளில் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதியின் சிறப்பு உதவியாளர் மற்றும் வெளியுறவுத் துறையின் மூத்த ஆலோசகர் ஆகியோர் தூதரின் தொடர்ச்சியான முயற்சியைப் பாராட்டியுள்ளனர்.