வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் வாகனங்கள் உட்செல்ல அனுமதி மறுப்பு
வவுனியா மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்கள் தவிர, தேவை நிமிர்த்தம் வருபவர்களது வாகனங்கள் உட்செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தங்கள் தேவைகள் நிமிர்த்தம் வரும் பொதுமக்கள் வாகனங்களைப் பாதுகாப்பாக மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் நிறுத்திவிட்டுச் செல்வது வழமை. அண்மைய நாட்களாக வாகனங்கள் மாவட்ட செயலகத்தின் வளாகத்திற்குள் உட்செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வாகனத் தரிப்பிடம் எதுவும் இல்லாத நிலையில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்குச் சிரமப்படுகின்றனர்.
மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பாரிய இடவசதியுடன், மர நிழலும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மக்கள் தங்கள் கருமங்களை ஆற்றக்கூடியதாக இருந்தது.
தற்போது ஏ9 வீதியோரங்களில் அதிக வாகனங்களை நிறுத்துவதனால் விபத்துகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.