இராசேந்திரங்குளம் சமுர்த்தி உத்தியோகத்தரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
வவுனியா - இராசேந்திரங்குளம் சமுர்த்தி உத்தியோகஸ்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (24.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராசேந்திரங்குளம், விநாயகபுரம், பாரதிபுரம், பொன்னாவரசன்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உத்தியோகஸ்தர் 3 வருடங்களின் பின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமுர்த்தி கொடுப்பனவுகள்
இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், குறித்த உத்தியோகத்தர் கிராம மக்களுக்கு உதவிகள் செய்ய கூடியவர் என்பதோடு கோவிட் காலங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மக்களின் வீடுகளுக்கே சென்று சமுர்த்தி கொடுப்பனவுகளையும் வழங்கியிருந்தார்.
மனு கையளிப்பு
மக்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து அவர்களின் நிலை அறிந்து செயற்படுவார். இவ்வாறான ஒருவரை இடமாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
இதன்போது வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், அகில இலங்கை இளைஞர் முன்னணியின் தலைவருமான விக்டர்ராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுவை பெற்றதுடன் அதனை அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிப்பதாகவும் உறுதிமொழி வழங்கியதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.