கொழும்பில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரி பெருந்தோட்ட நிறுவன முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் உருபொம்மையினை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது இன்று (09) கொழும்பு (Colombo) 04இல் அமைந்துள்ள வஜிர வீதியில் உள்ள தோட்ட துறைமார் சம்மேளத்தின் கட்டடத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடல்! அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
ஆர்ப்பாட்டக்காரர்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் அறியாது தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் வழங்க முடியாத தம்மிக்க பெரேரா எதிர்காலத்தில் இந்த நாட்டை எவ்வாறு முன்னெடுத்து செல்லுவார் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேல்வி எழுப்பினர்.
எது எவ்வாறாக இருப்பினும் கடந்த முறை போன்று எமக்கு எவ்வாறு 1000 ரூபாய் சம்பளத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெற்றுகொடுத்தாரோ அதே போன்று இம்முறையும் 1700 ரூபாய் சம்பளத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிச்சயம் பெற்றுகொடுப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என தெரிவித்தனர்.
சம்பள பிரச்சினை
இதேவேளை வெளியேறு வெளியேறு கம்பனியே வெளியேறு, தொழிலாளியின் இரத்தத்தை உறிஞ்சாதே, முதலாளி வர்க்கமே தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை கொடு போன்ற பதாதைகளையும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததோடு, கலகத்தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினைக்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் உரிய தீர்வினை வழங்காவிடின் எமது போராட்டம் வேறு வடிவத்தில் உருவெடுக்குமென ஆர்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |