பறவைகளுக்கு நஞ்சூட்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
பறவைகளுக்கு நஞ்சூட்டிதாக சந்தேகிக்கப்படும் விவசாயிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றாடல் துறையினரும், விலங்கினங்களின் மீது அன்புகொண்டோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கை வனப்பாதுகாப்பு திணைக்களத்திடம் விடுக்கப்பட்டுள்ளது.
வில்பத்துவின் எலுவன்குளம் பகுதியில் அண்மையில் அதிகமான பறவைகள் இறந்து கிடந்தமை கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் குறித்த பறவைகளின் இறப்பு குறித்து உடனடியாக பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுற்றாடல் துறையினரும் விலங்கினங்களின் மீது அன்பு கொண்டோரும் கோரியுள்ளனர்.
வழமையாகவே இவ்வாறான செயற்பாடுகள் வனபாதுகாப்பு திணைக்களத்தினால் மூடி மறைக்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் நஞ்சூட்டல் நிரூபிக்கப்பட்டால் அதனை மேற்கொண்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வனப்பாதுகாப்பு திணைக்களத்தை கேட்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் குறித்த பறவைகளின் உடல்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தின்போது வயல் குருவிகள், காட்டுக்குருவிகள் மற்றும் கறுப்பு வயல் குருவிகள் என்ற அறியப்படும் சுமார் 500 பறவைகள் இறந்தநிலையில் மீட்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.