சுத்திகரிப்பு தொழிலாளர்களிற்கு உடனடியாக தடுப்பூசி வழங்குமாறு கோரிக்கை
வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களிற்கு உடனடியாக கோவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் மற்றும் பசுமைத்தொழிலாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கம் ஆகியன கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் இணைப்பாளர் ராமு சூரியகுமார், பசுமை தொழிலாளர் நலன்புரி கூட்டுறவுச் சங்கத் தலைவர் சீராளன் இமானுவேல், ஆகியோர் இணைந்து இன்று அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்ற குறைபாடு தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஊழியர்களிற்கு கோவிட் - 19 பரவக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.
எனவே தடுப்பூசியினை முதன்மைப்படுத்தி ஏற்றுவதன் மூலம் அவர்களுடைய உயிராபத்து பாதிப்பு குறைவதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
சுத்திகரிப்பு பணியாளர்கள் தமது பணிகளை அர்ப்பணிப்புடன் செய்துவரும் இந்நிலையில் அவருக்குத் தடுப்பூசியினை முதன்மைப்படுத்தி ஏற்றுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தொடர்புடைய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன் பல இன்னல்களுக்கு மத்தியில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மாநகரசபை, நகரசபை, பிரதேச சபைகளில் பணியாற்றிய தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இதுவரையான காலப்பகுதியில் நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் அவ் ஊழியர்களின் குடும்பங்களதும், பிள்ளைகளினதும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே அவர்களின் சேவை காலத்தினையும் அவர்களுக்கு இருக்கும் அனுபவ ரீதியிலும் திறமையின் அடிப்படையிலும் எந்த தகுதியும், நிபந்தனையும் பாராமல் அவ் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்க உயர் அதிகாரிகள் ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.