டெல்டா வகை கோவிட் வைரஸை சமாளிக்க தடுப்பூசி அவசியம்! உலக சுகாதார அமைப்பு அறிவுரை
மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் திரிபுகளில் டெல்டா வைரஸ் திரிபு அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளதாவது,
அதாவது, கோவிட் வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பரவி வருகிறது.
இங்கிலாந்து, பிரேசில், தென் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது.
எனவே இந்த வைரஸின் திரிபை கட்டுப்படுத்த அனைவரும் கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவ ஆரம்பித்துள்ளன. மிகவும் வேகமாக பரவக்கூடிய டெல்டா வைரஸ் திரிபானது இதுவரை 85 நாடுகளில் பரவியுள்ளது.
இது அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இது பற்றிய கவலை உலகம் முழுவதும் நிலவுகிறது.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களிடம் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. அதேபோல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளிலும் சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
கோவிட் பரவ பரவ அது புதிய வகைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். அது வைரசின் இயல்பாகும். இதற்கு தடுப்பூசி செலுத்தி கொள்வதே சிறந்த தீர்வாகும்.
எனவே பொதுமக்கள் இரண்டு தடுப்பூசி மருந்துகளையும் செலுத்திக் கொள்ள தாமதிப்பது கூட வைரசின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்றார்.