காந்தி தேசத்தால் புறந்தள்ளப்பட்ட அஹிம்சை போர்:கந்தையா ஜெகதாஸ் ஆதங்கம் (Video)
உலகத்திற்கு உண்ணாவிரதத்தினை சொல்லிக்கொடுத்தவர் காந்தியாகயிருக்கலாம். ஆனால் அந்த காந்தி தேசத்திற்கே உண்ணாவிரத்தின் மகிமையினை ஒப்புயர்வற்ற தன்மையினை உணர்த்தியவர் தியாக தீபம் திலீபன் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா கந்தையா ஜெகதாஸ் தெரிவித்துள்ளர்.
மட்டக்களப்பில் தியாகதீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம் நேற்று (26.09.20022) உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தமிழின வரலாற்றில் தியாகதீபம் திலீபன் ஒப்பற்ற தியாகமாக உலக அஹிம்சை அறப்போராட்டத்தினுடைய ஒரு உன்னதவடிவமாக திகழ்கின்றார்.
உலக வரலாற்றில் நீராகாரம் இல்லாமல் உண்ணா விரதத்திலிருந்து தன்னுடைய இன்னுயிரை ஈகம் செய்தவராகவும், முதன்மையானவராகவும் தியாக தீபம் திகழ்கின்றார்.
உண்ணா விரத போராளி
கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய, இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டு தமிழர்களின் வாழ்வில் மிகப்பெரும் துன்பியல் நிகழ்வு கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இதன்போது இந்திய
அமைதியை காக்கும் படையினர் இலங்கை மண்ணில் கால்பதித்து தமிழர் விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சூழ்நிலையில் ஐந்து கோரிக்கையினை முன்வைத்து
சாகும் வரையான போராட்டத்தினை ஆரம்பித்தார்.
இந்த போராட்டம் ஆரம்பிப்பதற்காக முக்கிய காரணம் அன்றைய பிராந்திய வல்லரசான இந்திய தேசமும், இலங்கை இன ஒடுக்குமுறை அரசாங்கமும், கூட்டுச்சேர்ந்து தமிழினத்திற்கு எதிராக மிகப்பெரும் சதிவலையினை பின்னியதுடன் தமிழினம் அழிப்புக்கு தயாரானது.
இதனை செய்ய வேண்டாம் என்று கோரி மென்முறையிலும் அஹிம்சை ரீதியிலும் வேண்டுகோள் விடுத்து இந்த மிகப்பெரும் அகிம்சை போரை ஆரம்பித்தார்.
அஹிம்சை போர்
இந்த அஹிம்சை போரை ஆரம்பித்த போது உலகுக்கு நம்பிக்கையிருந்தது. உலகுக்கு முதன்முதலில் அஹிம்சையை, உண்ணாவிரதத்தினை அறிமுகப்படுத்தியவர் மகாத்மா காந்தியடிகள்.
காந்திதேசம் இந்த அஹிம்சைக்கு, உண்ணாவிரதத்திற்கு மதிப்பளிக்கும் என்ற மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காந்திதேசம் அதனை புறந்தள்ளி அஹிம்சையினை கொச்சைப்படுத்த 12வது நாள் தியாகதீபம் தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.
தியாக தீபம் திலீபனின் அஹிம்சை போராட்டத்திற்கு அன்றைய காலகட்டத்தில் உலகம், இந்திய தேசம்,இலங்கை தேசம் செவிசாய்த்திருந்தால் அந்த நாளில் வரலாறுகள் வேறுவிதமாக மாறியிருக்கும். அழிவுகளும் துன்பங்களும் தடுக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அதனை காந்தி தேசமும் இலங்கையும் புறந்தள்ளி தமிழர் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினாலேயே தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகவும் நீடிக்க வழியேற்படுத்தியது.” என தெரிவித்துள்ளார்.
கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சிவயோகநாதன் மற்றும் அருட்தந்தை ஜோசப்மேரி
மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.