ஊரடங்கு உத்தரவினால் காப்பாற்றப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உயிர்கள்! வெளியாகியுள்ள தரவு
இன்றைய (20) நிலவரப்படி, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பின்னர், கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கையிலும் 40 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, செப்டம்பர் 18ம் திகதியுடன் முடிவடைந்த கடந்த 28 நாட்களில் கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 22ம் திகதி தொடங்கி முதல் 7 நாட்களில் 1309 கோவிட் இறப்புகள் பதிவாகியிருந்தன. ஆகஸ்ட் 29 தொடங்கி ஏழு நாட்களில் பதிவான கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 1365 ஆகும்.
செப்டம்பர் ஐந்தாம் திகதி தொடங்கி ஏழு நாட்களில், 1156 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 18 வரையிலான கடைசி வாரத்தில், கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 829 ஆகும்.
இந்த 4 வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரண்டாவது வாரத்தில் பதிவாகியுள்ளன. இருப்பினும், அந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நான்காவது வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை சுமார் 40 வீதம் குறைந்துள்ளது.
இதன்படி, ஆகஸ்ட் 20 அன்று தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமை தெளிவாகிறது.