இலங்கையின் ஆதிக் குடியிருப்புகளில் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க தீர்மானம்
இலங்கையின் ஆதிக் குடியிருப்புகளில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு சனப் பரம்பல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன, கலாசார மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோரின் வேண்டுகோளின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன் பிரகாரம் இலங்கையின் ஆதிகுடியிருப்புகளான மல்வத்துஓயா ஆற்றங்கரைப் பகுதி, அநுராதபுரத்தின் மகாவிகாரை அமைந்துள்ள பிரதேசம் மற்றும் சீதாவக்கை பிரதேசங்களில் அதற்கான அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
தொல்பொருள் முக்கியத்துவம்
குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் மூலம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் சின்னங்களைக் கண்டறிதல், அவற்றைப் பாதுகாத்தல் என்பவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் திரியாய் பிரதேசத்தில் முற்காலத்தில் அமைந்திருந்த துறைமுகம் மற்றும் அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வரையான நீர்வழிப்பாதை அமைந்திருந்த வழித்தடம் என்பனவும் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை பிரதேசத்திலும் அவ்வாறான அகழ்வுகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட போதிலும், அப்பிரதேசத்தில் தற்போதைக்கு அதிகரித்துள்ள சனப்பரம்பல் காரணமாக அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்கும் சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
