மயக்கமடைந்த பெண் மரணம் - பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் உறுதி
செல்லப் பிராணியான நாய் திடீரென இறந்த சோகத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குறித்த பெண்ணின் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் திடீரென உயிரிழந்துள்ளது. இச்சம்பவத்தை ஜீரணிக்க முடியாத குறித்த பெண் ஐந்து நாட்களாகத் தொடர்ந்து சாப்பிடாமல் இருந்துள்ளார்.
அவர் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென மயக்கமடைந்த நிலையில், உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் வெளி நோயாளர் பிரிவு அனுமதியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு கோவிட் வைரஸ் தொற்று உள்ள விடயம், அவரது சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த 61 வயதான மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சடலத்தைச் சுகாதார முறைப்படி மின் தகனம் செய்ய அனுமதி அளித்துள்ளார்.




