இலங்கையில் மீண்டும் இருண்ட யுக ஆட்சியா...?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 2015 முதல் 2019 வரையான நான்கரை வருட கால ஆட்சி குறித்து என்ன குறை, குற்றம் கூறினாலும், அந்த ஆட்சி முறைமை தொடர்பான ஓர் உண்மையை மறக்க - மறைக்க - மறுக்க - முடியாது. அது - இலங்கையின் கடந்த கால் நூற்றாண்டு காலச் சரித்திரத்தில் அரச படைகள் மற்றும் பொலிஸாரின் அட்டூழியங்கள் மிக மிகக் குறைவாக இருந்த "பொற்காலம்' அதுதான்.
அந்த ஆட்சிக் காலத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அராஜகங்கள் இடம்பெற்றன என்றாலும், அவை எவையும் ஆட்சித் தலைமையின் மறைமுக ஆசீர்வாதம், அனுமதியுடன் நடந்தன என்று கூறுவதற்கு இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்துக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழியில் கறுப்புக் கொடி காட்டி, ஆர்ப்பாட்டம் நடத்திய சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் போன்றோரை, தமது வாகன அணியை இடைநிறுத்தி, இறங்கிச் சென்று சந்தித்தவர்.
அவ்வளவு தூரம் "ஸிம்பிள்' ஆக ஆட்சியைக் கொண்டு நடத்தியவர் என்பது விதந்துரைக்கப்பட்டு மெச்சத்தக்கதே. அவருக்கு முன்பிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா, பிரேமதாஸா, சந்திரிகா, மஹிந்த ராஜபக்ச, இப்போது இருக்கின்ற கோட்டாபய ராஜபக்ச என்று எந்த ஜனாதிபதியும் மைத்திரிபால சிறிசேன போல எளிமையாகவும் கெடுபிடி பண்ணாமலும் இருக்கவில்லை.
ஆட்சி அதிகாரத்தின் வலிமையை தீவிரமாக மக்கள் மீது காட்டும் பண்பியல்பு அவரிடம் இருக்கவே இருக்கவில்லை. அந்த அமைதியின் நிழலை தமிழர்கள் உட்பட இலங்கைத் தீவின் மக்கள் எல்லோரும் நன்கு அனுபவித்தனர் என்பது மறுக்கக் கூடியதல்ல. இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதான இக்கட்டு நிலைமை.
என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் - குறிப்பாக இந்தத் தீவின் தமிழ் பேசும் மக்கள் - கலவரப்படும் அவல நிலைமை. 2005 - 2014 ஆண்டுகளில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்திலும் பின்னரும் இலங்கை மக்களும் ஊடகங்களும் மிகக் கொடூரமான - இரக்கமேயற்ற - ஓர் ஆட்சிப் பீடத்தைக் கண்டு கலங்கிப் போயினர். அந்த இருண்ட யுக காலத்தில் இலங்கை மக்கள் எதிர்கொண்ட அராஜகங்கள், அட்டூழியங்கள், அடாவடிகள் மீள நினைத்துக் கூடப் பார்ப்பதற்கு அச்சம் தருவன. அந்த இருண்ட யுகம் மீண்டும் வந்து விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
மீண்டும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமைக்கு இந்த அரசாங்கம் அனுமதிக்கப் போகின்றதா என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கடந்த 10 ஆம் திகதி ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் கடத்தப்பட்ட நிகழ்வை கோடிட்டுக் காட்டி, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டிருக்கின்றார். கறுப்பு நிற வானில் வந்தவர்களினால் ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் கடத்தப்பட்டிருக்கின்றார்.
அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் வீதியோரத்தில் அவர் தூக்கி வீசப்பட்டிருக்கின்றார்.
"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே! மீண்டும் கடத்தல் சம்பவங்கள் தொடர்வதை நீங்கள் அனுமதிக்கப் போகின்றீர்களா?' என்று முன்னாள் சபாநாயகர் தமது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த விடயத்தையும் சட்ட ரீதியாக அணுக முடியாத நிலையில் இருக்கும் ஆட்சிப் பீடங்கள், மாற்று வழியாக இத்தகைய சட்டத்துக்கு முரணாக வகைகளை நாடுகின்றன. சரியோ, பிழையோ இத்தகைய அராஜகங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. இல்லையேல் அவை புற்று நோய் போலப் பரவி சமூகத்தில் எங்கும் அரங்கேறத் தொடங்கி விடும்.
இத்தகைய அராஜகங்கள், அட்டூழியங்களுக்கு ஆட்சிப்பீடத்தின் - அதிகாரத் தரப்பின் - மறைமுக ஆசீர்வாதம் இல்லாவிட்டால் - இத்தகைய கொடூர சம்பவங்களுடன் ஆட்சிப் பீடத்தின் அரூபக்கரங்கள் நேரடியாகத் தொடர்புபடா விட்டால் - இத்தகைய கடத்தல் கொடூரங்களின் சூத்திரதாரிகள் உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டு, அம்பலப்படுத்தப்பட்டு, உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
அது வரையில் இத்தகைய செயல்கள் ஆட்சிப் பீடத்தின் அராஜகமாகவே அடையாளப்படுத்தப்பட்டு, கருதப்படும் என்பதை அதிகாரத் தரப்பினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri
