ஹார்முஸ் நீரிணையில் அபாயகரமான சூழல்: சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தொடர்பில் எச்சரிக்கை
ஈரான் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கிரீஸ் நாட்டின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கும் இடையிலான மோதல் விரிவடைந்து வருவதால், டஜன் கணக்கான சரக்குக் கப்பல்கள் அந்தப் பகுதியில் சிக்கித் தவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மிகுந்த எச்சரிக்கை
சர்வதேச கடல்சார் வர்த்தகம் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகள் உடனடியாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழல் காரணமாக, கிரீஸ் கொடி ஏந்திய கப்பல்கள் பெர்சிய வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணை ஆகிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்தப் பகுதியில் இருக்கும் கப்பல்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
உலகின் மசகு எண்ணெய் விநியோகத்தில் பெரும் பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், இந்தப் பாதையில் ஏற்படும் தடையானது உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.