முல்லைத்தீவு சிலாவத்தையில் சங்க காலச் செடியால் ஏற்பட்ட ஆபத்து : மக்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கை.
முல்லைத்தீவு சிலாவத்தைச் சந்தியினை சூழவுள்ள இடங்களில் பயணிக்கும் மற்றும் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறுவுறுத்தப்பட வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சங்ககாலச் செடியான கண்புவின் விதைகள் காற்றில் பரவ ஆரம்பித்துள்ள இன்றைய காலநிலையில் அவை கண்களில் மோதுவதோடு விரைவான காற்று வீசும் நேரங்களில் சுவாசத்தோடும் கலந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
சிலாவத்தை சந்தியில் அம்மன் ஆலயத்திற்குச் எதிரே அதிகளவான கண்புச் செடிகள் வளர்ந்து அவற்றின் வித்துக்களை காற்றில் கலந்து பரவச் செய்த வண்ணம் அவை இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
விபத்துக்களுக்கான ஏது
உந்துருளிகளில் மற்றும் ஈருருளிகளில் பயணிப்பவர்களின் கண்களினுள் கண்பு விதைகள் செல்லும் அபாயம் இருப்பதாகவும் அதனால் விபத்துக்களை ஏற்படுத்தி விடும் சூழலும் இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கண்புவின் விதைகள் பஞ்சு மற்றும் வித்து என்பவற்றை கொண்ட சிறிய துரும்பாகவும் காற்றில் மிதக்கும் தன்மையுடையதாகவும் இருக்கின்றது.
அவை கண்ணிணுள் மோதும் போது சிறிய தூசுகள் கண்ணினுள் சென்று உறுத்துவது போல் இருக்கும். இது பயணங்களின் போது விபத்துக்களை தோற்றுவித்து விடும் சூழலை சாரதிகளுக்கு ஏற்படுத்தும் என குறிப்பிடுகின்றனர்.
காற்றின் திசை கண்புச் செடிகளை கொண்ட பகுதியில் இருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியை நோக்கியதாக இருக்கின்றதனை அவதானிக்க முடிகின்றது.
தாக்கம் ஏற்படும் பகுதி
சிலாவத்தைச் சந்தியில் 100 மீற்றர் நீளத்திற்கும் கூடிய பகுதியில் கண்புச்செடியின் விதைகள் காற்றில் மிதந்து வருவதனை அவதானிக்கலாம்.
இப்பகுதியில் சிலாவத்தைச் சந்தை மற்றும் வியாபார நிலையங்கள், பேரூந்து தரிப்பிடங்கள், என்பவற்றோடு மக்கள் குடியிருப்புக்களும் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிலாவத்தை சந்தி என்பது முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியுடன் மாதிரிக்கிராம வீதி இணைப்பை ஏற்படுத்துவதால் ஏற்படும் முச்சந்தி ஆகும்.
கண்புச் செடியின் பரம்பல்
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதிக்கு மேற்கேயும் மாதிரிக்கிராம வீதிக்கு வடக்கு பக்கமாகவும் உள்ள வயல்வெளியின் முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியை நோக்கியதாக உள்ள சுமார் மூன்று ஏக்கரிலும் கூடிய நிலப்பரப்பில் கண்புச் செடிகள் பரந்து வளர்ந்துள்ளது.
மாரி காலத்தில் தேங்கும் அதிகளவான நீரில் நன்கு வளர்ந்து கோடைகாலங்களில் அதிகளவிலான வித்துக்களை காற்றில் கலந்து விடுமாறு அவற்றின் வாழ்க்கை இருப்பதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும் இது தொடர்பில் பொதுமக்கள் தெளிவான விளக்கங்களை கொண்டவர்களாக இல்லை என்பதை அவர்களுடன் மேற்கொண்ட உரையாடலின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
நிச்சயமாக கண்புச்செடியின் வாழ்கை முறையினையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் மற்றும் தீமைகளையும் தெளிவாக அறிந்து கொள்ளல் வேண்டும்.
அப்படியான ஒரு சூழலிலேயே கண்புச்செடி தொடர்பான விளைவுகளை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதும் இங்கே நோக்கத்தக்கது.
கண்புச்செடி
சங்ககாலத்தில் கண்பு என அழைக்கப்பட்ட இந்த செடிகள் தற்கால ஈழத்தில் சம்பு என அழைக்கப்படுகிறது.சண்பு எனவும் அழைக்கப்படும் இது பொதுவாக வர்த்தக நோக்கில் கேட்டைல் (Cattils) என அழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
ஈரலிப்பான நிலங்களில், ஆறு , குளங்கள் போன்ற நீர்நிலைகளில் நன்கு வளர்ந்து பரம்பலடையும் சம்பு நிலக்கீழ்தண்டுடைய தாவரமாக இருக்கின்றது.
டைபா அங்கஸ்டடா (Typha angustata) என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட இந்த கண்புச்செடிகள் வர்த்தக நோக்கில் அதிக பயன்பாடுடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் 30 வகையான கண்புச் செடிகள் உள்ளன.ஒரு வகையில் இவை ஆக்கிரமிப்பு தாவரமாகவும் செயற்படுகின்றதாக விவசாய பாட ஆசிரியர்கள் எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது.ஆயினும் அதிகளவான நீர்வாழ் மற்றும் அரை நீர்வாழ் அங்கிகளின் வாழிட ஆதாரமாகவும் கண்புச்சாகியம் இருப்பதாக உயிரியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாணாற்றுப்படையில் கண்புச் செடி பற்றிய குறிப்பு பின்வருமாறு அமைகின்றது. "பொன்காண் கட்டளை கடுப்ப கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்" என அமைகின்றது.
பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரை கல்லைப் போல கண்பினது புல்லிய காயில் தோன்றிய தாதை ,கதிரை முறித்து மார்பில் அடித்து கொள்ளும் போது சிறுவர்களின் மார்பு மாறிக்கொள்ளும் என நாச்சினார்கினியர் உரை கொள்வதும் எடுத்துக்காட்ட முடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |