நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் ஒன்றுக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள்
மன்னார் - நாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் சிறுபோக நெற் பயிர்ச் செய்கைக்கான காணிப்பதிவு இடம்பெற்று வரும் நிலையில், மக்கள் அங்கு கூடி நின்றதால் முருங்கன் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் துரித நடவடிக்கைகளினால் குறித்த பகுதியில் இன்று ஏற்படவிருந்த அபாய நிலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சிறுபோக நெற் பயிர்ச் செய்கைக்கான காணிப்பதிவு சகல கமநல கேந்திர நிலையங்களிலும்
பதிவு செய்யும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதன் அடிப்படையில் இன்று நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் மக்கள் எவ்வித சுகாதார நடை முறைகளையும் பின்பற்றாது கூடி நின்றனர். முகக்கவசங்கள் அணியாமலும் ,போதிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் நூற்றுக்கும் அதிகமான மக்கள் அவ்விடத்தில் கூடி நின்றனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முருங்கன் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக விரைந்து செயற்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி அவ்விடத்திற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்களை அனுப்பி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நானாட்டான் கமநல கேந்திர நிலையத்தில் காணிப்பதிவுகளை மேற்கொள்ள வந்த மக்களைச் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக முகக்கவசம் அணிய வைத்து, சமூக இடை வெளியை கடைபிடிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் ஏற்பட இருந்த பாரிய அபாயம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.தேவையறிந்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு உடனடியாக செயற்பட்ட முருங்கன் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருக்கு நானாட்டான் பிரதேச மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் நன்றிகளைத் தெரிவித்தனர்.