பல பின்னணிகளுடன் கொலை செய்யப்பட்ட டேன் பிரியசாத்.. வெளிவரும் உண்மைகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொலன்னாவை நகரசபை வேட்பாளரான, அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
39 வயதான அவர், கொலன்னாவை லக்சித செவன தொடர்மாடி குடியிருப்பில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
டேன் பிரியசாத் மீது நான்கு துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு, மார்பு பக்கத்திலும் மற்றைய இரண்டும் தோள்பட்டை பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றக் கும்பல்
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த துப்பாக்கிச் சூடானது நேற்றிரவு, 9.10 மணியளவில் இடம்பெற்ற நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்த பின்னரே இன்று அதிகாலை இறந்ததாக பொலிஸார் அறிவித்தனர்.
அதேவேளை, டேன் பிரியசாத்துக்கு அருகில் இருந்தவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் ஒரு குற்றக் கும்பலுக்கும் டேன் பிரியசாத்துக்கும் இடையில் உள்ள முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இனக் கலவரங்கள்
இதற்கிடையில், பொலிஸார் பல்வேறு கோணங்களில் டேன் பிரியசாத்தின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட டேன் பிரியசாத், பின்னர் பிணையில் செல்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறிருக்கையில், கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற, முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக்கலவரமான திகன கலவரத்தில் முன்னிலையாக இருந்து செயற்பட்டவர் டேன் பிரியசாத் என்ற குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.
அதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி, அவர்கள் மீது டேன் பிரியசாத் தாக்குதல்களும் நடத்தியதாக கூறப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அதுமாத்திரமன்றி, 2023ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி அன்று, பொரளை கனத்த சந்தியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலின் போது டேன் பிரியசாத் உட்பட்ட குழுவினர் நினைவேந்தலுக்கு எதிராக செயற்பட்டு குழப்பம் விளைவித்தனர்.
இவ்வாறான பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, அரசியல் ஆர்வலரான டேன் பிரியசாத்தின் கொலையில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கஞ்சிபானி இம்ரான் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால், முன்னதாக கஞ்சிபானி இம்ரான் உட்பட பாதாள உலகக் குழு தலைவர் ஆகியோரை இலங்கைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
எனவே, டேன் பிரியசாத்தின் மரணத்தில், பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர்களின் ஈடுபாடு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இனவாதி
இதற்கிடையில், டேன் பிரியசாத்தின் கொலை சம்பவம் தொடர்பிலான செய்திகள் வெளியானதிலிருந்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாக செயற்பட்ட இவர், ஒரு இனவாதி எனவும், சமூகத்தில் மக்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்ககளை முன்வைத்து இனவாதத்தை தூண்டியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் அவர் பல முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்து மக்களை தவறான வகையில் வழிநடத்த முற்பட்டவர் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் கொலையில் பாதாள உலக குழுக்கள் மறறும் சில பலம் பொருந்திய அரசியல் தரப்பினரும் தொடர்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
