இலங்கையின் பாடசாலை முறைமையில் சேர்க்கப்படவுள்ள சட்டம் தொடர்பான பாடத்திட்டம்
பாடசாலை பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்பதை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான பொருத்தமான முறையை வகுப்பதற்காக நாடாளுமன்ற துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் கல்வி மற்றும் நீதி தொடர்பான அமைச்சர் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இந்த துணைக்குழு நியமிக்கப்பட்டது.
இதன்படி, 8 பேர் கொண்ட குழுவில் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூஃப் ஹக்கீம், எஸ்.ஸ்ரீதரன், வீரசுமண வீரசிங்க,சாகர கரியவாசம், அமரகீர்த்தி அத்துகோரள, டயானா கமகே மற்றும் மேஜர் சுதர்ஷனாடெனிபிட்டிய ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த துணைக்குழுவின் செயலாளராக உதவி பொதுச்செயலாளர் டிக்கிரி கே.ஜெயதிலக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்போது கருத்துரைத்த நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி, சட்டத்தின் பொது அறிவுமிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால் இந்த நாட்டின் குழந்தைகளுக்கு சட்டத்தைப் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்றுக் கூறினார்.
இதனையடுத்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன்பிறகு, ஒரு நிபுணர் குழுவின் ஆலோசனையின் பேரில் சட்டப் பாடத்திட்டத்தை விரைவில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.