முகமூடியுடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம்: சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு கரிநாளே...!
இலங்கைத் தீவானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
ஆனாலும் இலங்கைத் தீவில் இனங்களுக்களுக்கிடையில் புரையோடிப் போயுள்ள தேசிய இனப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது.
இதன் காரணமாகவே, ஒரு பகுதியினர் சுதந்திர தினம் கொண்டாட்டத்தில் ஈடுபட, இன்னொரு பகுதியினர் அதனை தமது கரிநாளாகவும் அனுஸ்டித்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி
காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் தேசிய இனப் பிரச்சனைத் தீர்வு குறித்து பேசுகின்ற போதும் அது குறித்து ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுத்ததாக இல்லை.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இனப்பிரச்சனை தீர்வு குறித்து பேசி வரும் கருத்துகளும் அவ்வாறே வெற்று வார்த்தைகளுடன் முடிந்து விடுமா என்ற கேள்வியும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ளது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வீதிக்கு மக்கள் இறங்கியமையால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் ஜனாதிபதியாகினார். அவர் பதவிக்கு வந்ததும் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சனைகள் இருப்பதை ஏற்றுக் கொண்டதுடன், 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பாக அப் பிரச்சனைகளை தீர்ப்பேன் எனவும் அனைவரும் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாட எதிர்பார்த்திருப்பதாகவும் கூறியிருந்ததார்.
அதன் ஒரு கட்டமாக சர்வகட்சி சந்திப்புகள், தமிழ்க் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்புகள் என்பன நடந்தன. ஆனால் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.
முக்கிய அரசியல் தலைமை கொடுத்த வாக்குறுதி
சுதந்திர தினத்திற்கு முன்னதாக பிரச்சனைக்கு தீர்வு என்பது வெறும் சந்திப்புகளுடன் நிறைவுக்கு வந்திருந்ததுடன் 75 ஆவது சுதந்திர தினமும் கடந்து தற்போது 78 ஆவது சுதந்திர தினமும் முடிவடைந்துள்ளது.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் சுதந்திர சதுக்க வளாகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ''இலங்கையை கட்டியெழுப்புவோம்'' என்ற தொனிப் பொருளில் எளிமையாக இடம்பெற்றிருந்தது.

இதன்போது, நாட்டின் இனப் பிரச்சனை தீர்வு குறித்து ஜனாதிபதி தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தேவையற்ற செலவுகளை தவிர்த்து அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி மாவட்ட செயலகங்களில் பிரதான நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.
சில தமிழர் பகுதிகளில் வாகனப் பேரணிகளும் கடந்த ஆண்டைப் போன்று இந்த முறையும் இடம்பெற்றிருந்தது. வடக்கு - கிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்தி சுதந்திர தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருந்தது.
பல்வேறு அச்சுறுத்தல்கள், அடக்கு முறைகளுக்கு மத்தியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
கரிநாள் அனுஷ்டிப்பு
இவைதவிர, யாழ் பல்கலையில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக புலம் பெயர் தேசங்களிலும் இலங்கை தூதரகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்தன.
அதிலும் குறிப்பாக, பிரித்தானியாவில் இலங்கை தூதரகம் முன்பாக ஏக்கிய ராச்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுதந்திர தினத்தை கரிநாள் எனத் தெரிவித்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

சுதந்திர தினத்தில் தெற்கில் இடம்பெற்ற கொண்டாட்டங்களும் வடக்கு - கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர் தேசங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களும் இந்த நாட்டில் இன்னும் இரு வேறு தேசங்களாக மக்கள் வாழ்ந்து வருவதையே படம் போட்டு காட்டுகின்றன.
இந்த நிலையை இன்னும் தென்னிலங்கை உணராமைக்கு காரணம் என்ன? யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சனைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நல்லெண்ண முயற்சிகள் கூட முழுமனத்துடன் இடம்பெற்றதாக தெரியவில்லை.
முகமூடியுடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசு
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அப்பால் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, காணி விடுவிப்பு என தமிழ் மக்கள் முன் ஏராளம் பிரச்சனைகள் உள்ளன.
சர்வதேச ரீதியில் ஏற்படும் நெருக்கடியை தணிப்பதற்கும், ஐ.நாவின் அழுத்தத்தை குறைப்பதற்காகவும் அவ்வப்போது ஒரு சில காணி விடுவிப்புக்களும், ஒரு சில கைதிகளின் விடுதலையும் இடம்பெற்றாலும் கூட அவை திருப்தியைத் தருவதாக அமையவில்லை. தற்போதைய அரசாங்கம் முதல் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.

கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக கடும் போக்குடன் செயற்பட்ட இந்த அணி தற்போது தேசிய மக்கள சக்தி என்ற புதிய முகமூடியுடன் தமிழ் மக்களின் ஆதரவையும் பெற்று ஆட்சிக்கு வந்துள்ளது.
அந்த முகமூடியை நிரந்தரமாக அணிந்து மக்களது பிரச்சனைகளை இவர்கள் தீர்ப்பார்களா என்பதே தமிழ் மக்களின் கேள்வியாகும். ஆனால், கடந்த ஆட்சியாளர்களால் தமிழ் மக்களின் குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் முகமாக கிபுல் ஓயா திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது கிடப்பில் இருந்தது.
வவுனியா வடக்கில் தமிழர் நிலங்களை கபளீகரம் செய்யும் வகையில் அடர்ந்த வனவளத்தை அழித்து அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்த அரசாங்கம் பெருமளவு நிதியையும் ஒதுக்கியுள்ளது.
இது குறித்து தமிழ் தரப்புக்ளுடனோ அல்லது சம்மந்தப்பட்ட பகுதி மக்களுடனோ எந்தவித பேச்சுக்களும் இடம்பெறாது முன்னைய நில அகரிப்பு குடியேற்ற திட்டங்களை வலுப்படுத்துவது போன்று இத் திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக அண்மையில் நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம் ஒனறும் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆக, கட்நத ஆட்சியாளர்கள் விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் நீட்சியாக செய்ய முயல்கின்றதா என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.
தேசிய இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்..
பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க அனைவரும் ஒன்றுபட்ட செயலாற்ற வேண்டிய நிலையில் கூட தமது நாட்டில் வாழும் இன்னொரு தேசிய இனத்திற்கு தமக்கு இருப்பது போன்ற சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் கொடுப்பதற்கு இன்னமும் தென்னிலங்கை முன்வரவில்லை என்பது மிகவும் வேதனையான விடயம்.
இந்த நாட்டில் தேசிய இனப்பிரச்சனை தீர்கப்படாதவிடத்து, இந்த நாடு இன்னும் பாதாளத்தை நோக்கியே செல்லும் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தமே இந்த நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு அவ்வாறான சம்பவம் இந்த நாட்டில் மீள நிகழாமையை உறுப்படுத்த வேண்டும்.
இதனை அனைத்து சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலமே 79 ஆவது சுதந்திர தினத்தை என்றாலும் எல்லோரும் ஒரு தாய் மக்களாக ஒருவர் தோளில் ஒருவர் கைகோர்த்து கொண்டாட முடியும். அதுவே இந்த நாட்டின் உண்மையான சுதந்திர தினமாகவும் அமையும்.