ஊரடங்கு சட்டம் தளர்வின் போது பேருந்து நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் (Photos)
நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணியளவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குப் பேருந்து நிலையங்களிலும் அதிகளவான மக்கள் ஒன்றுகூடிய நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
மன்னார்
மன்னாரிலும் மக்கள் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வேறு பகுதிகளுக்குச் செல்வதற்குப் பேருந்து நிலையங்களிலும் அதிகளவாக ஒன்றுகூடியிருந்தனர்.
அரச திணைக்களங்கள் மற்றும் வங்கிகள் 12 மணி வரை இயங்கிய நிலையில் அதிகளவான மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தனர்.
பொது இடங்களில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் குறைவாகவே காணப்பட்டது. மேலும் இன்று மதியம் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், மக்கள் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி - ஆசிக்
மலையகம்
நாட்டில் நடைமுறையிலிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது.
சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முறமாக ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
சில இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
பாடசாலைகள் மூடப்பட்டு இருப்பதையும், அரச திணைக்களங்கள் திறந்திருந்துள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இடம்பெறுவதையும் அவதானிக்கமுடிந்தது.
மேலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நகரங்களின் பிரதான சந்திகளில் வீதிமறியல் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி - திருமால்
யாழ்ப்பாணம்
யாழிலுள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் கூட்டம் கூடமாக வருகைதந்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
ஊரடங்கு சட்டத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றையதினம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், இவ்வாறு மக்கள் வந்து செல்வதை காணமுடிகிறது.
அந்தவகையில் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுமார் 800ற்கும் அதிகமானோர் வாகனங்களுடன் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முண்டியடித்ததை அவதானிக்க முடிந்தது. இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதன்போது குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் வாகன நெரிசலை சீர் செய்யவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சமன் குணதிலகவின் வழிகாட்டலின் கீழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.