வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து பண்பாட்டு விழா: எழுந்துள்ள குற்றச்சாட்டு
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வடக்கு மாகாண பண்பாட்டு விழா இடம்பெறுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும்,முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அபிவிருத்தி குழு தலைவருமான செல்லத்தம்பி திலகநாதன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாண பண்பாட்டு விழாவானது இன்றையதினம் (16.12.2025) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த விழா இடம்பெறும் வாயிலுக்கு முன்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்தல்
வன்னியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிகழ்வு நடைபெறுவது தொடர்பான அறிவித்தல் வழங்கப்படவில்லை. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற அடிப்படையில் எனக்கு எவ்வித அறிவித்தலோ, அழைப்பிதழ்களோ வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாண சபையினுடைய கல்வி திணைக்களம், கல்வி அமைச்சு ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கின்றது என்பதனை இந்த நிகழ்வை உதாரணமாக கொள்ளலாம். அதாவது எங்களை அழைக்கவில்லை.
இதன் மூலம் வன்னி பிரதேசத்தை வட மாகாண கல்வி அமைச்சு எவ்வாறு புறக்கணித்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.
வடக்கு மாகாணத்தின் கல்வி நிர்வாக அதிகாரிகளின் செயற்பாடு
வடக்கு மாகாணமானது உண்மையில் கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் முகப்புத்தகத்தில் பார்த்திருப்பீர்கள் முன்னாள் மாகாண பணிப்பாளர் எவ்வாறு இறந்தார், அவருக்கு என்ன நடந்தது என்பதும். கல்வி என்பது ஒழுக்கம், ஒழுக்கம் இல்லாத கல்வி எந்தவிதத்திலும் பயனற்றது.
தற்போது மக்கள், ஆசிரியர்கள் என்னிடம் பலர் முறையிட்டுள்ளார்கள்.வடக்கு மாகாணத்தின் கல்வி நிர்வாக அதிகாரிகள் ஆசிரியர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்கின்றார்கள் என, இதற்கான சான்றுகளும் என்னிடம் இருக்கிறது.
ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து வடக்கு மாகாண கல்வி அமைச்சு திருத்தப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.