அரசியல் எதிர்காலத்திற்காக ராஜபக்சர்களை காட்டிக்கொடுக்கும் நாமல்! எழுந்துள்ள விமர்சனம்
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளராகச் செயல்படும் நாமல் ராஜபக்ச தனது அரசியல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக, தமது கட்சியின் தற்போதைய தலைவர் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய தரப்பினரை காட்டிக்கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபகச, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான பதவி நீக்கம் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
அது செய்யப்பட்டிருக்கக்கூடாத ஒன்று என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், பசில் ராஜபக்ச முக்கிய அமைச்சராகவும் இருந்த காலத்தில், 2013 ஆம் ஆண்டு ஷிராணி பண்டாரநாயக்க தலைமை நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
திவி நெகும சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு சாதகமாக இல்லாததால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சில அரசியல்வாதிகளை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.
ராஜபக்ச அரசாங்கத்தின் போது தலைமை நீதியரசர் பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முடிவும் தவறான முடிவு என்றும், ராஜபக்ச அரசாங்கம் செய்த அதே தவறை தற்போதைய அரசாங்கம் செய்யக்கூடாது என்றும் நாமல் ராஜபக்சே கூறியிருந்தார்.
எங்கள் வரலாற்றில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகள் தவறானவை என்றும், ஒரு கட்சியாக, அந்த தவறுகளின் விளைவுகளை நாங்கள் இன்னும் அனுபவித்து வருகிறோம் எனவும் நாமல் கூறியிருந்தார்.
எனவே, எதிர்காலத்தில் ஒரு அதிகாரியை குறிவைத்து அரசியல் முடிவை எடுக்க நாடாளுமன்றத்தின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டால், நாங்கள் தனிப்பட்ட முறையிலும் ஒரு கட்சியாகவும் அதற்கு உடன்பட மாட்டோம்," என்று நாமல் வலியுறுத்தியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |