பொருட்களின் விலை அதிகரிப்பால் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள் காரணமாக மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும்,அரசாங்கம் பொருட்களின் விலைகள் சம்பந்தமாக இதனை விட பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ரா ஆராச்சி (Jagat Kumara Sumitra Arachchi) தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார,
பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரித்தால், எங்கு சென்று முடியுமோ என்பதை எண்ணிப்பார்க்க முடியாது. பொருட்களின் விலை அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத தரப்பினருக்கு அரசாங்கம் ஏதேனும் நிவாரணத்தை வழங்க வேண்டும்.
குறிப்பாக சமூர்த்தி உதவி பெறுவோர் உட்பட குறைந்த வருமானத்தை பெறுவோருக்கு எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் கிடைக்காது போனால், அவர்கள் மிகப் பெரிய கஷ்டத்திற்குள் விழுவார்கள். அப்படியான நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் மக்கள் சட்டியில் இருந்து அடுப்பில் அல்லது அடுப்பில் இருந்தும் கீழே விழுவது உறுதியானது.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் பொருட்களின் விலைகளை நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை கூறுகின்றேன்.
மக்கள் தற்போதைய அரசாங்கத்திடம் எதிர்பார்த்த பலவற்றை நிறைவேற்ற முடியாமைக்கு கோவிட் தொற்று நோய் காரணம் எனவும் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படாததால், மக்கள் மத்தியல் அதிருப்தி ஏற்பட்டுள்ளதை புரிந்துக்கொண்டுள்ளமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.