இரட்டைக் கொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் – நொச்சிக்குளம் இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணை
வழக்கின் நான்கு சந்தேகநபர்களுக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தால் கடந்த 23 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி அறிவித்துள்ளார்.
குறித்த நான்கு சந்தேகநபர்களும் மன்னார் நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நான்கு சந்தேகநபர்களுக்கும் எதிரான வழக்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
16 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
இதேவேளை, வழக்கின் ஏனைய 16 சந்தேகநபர்களும் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கான பிணை மனு மன்னார் மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான பரிசீலனை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர்கள் 16 பேரையும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் A.S.ஹிபதுல்லாஹ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இரண்டு சகோதரர்கள் கடந்த ஜூன் மாதம் 10 ஆம் திகதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டைக் கொலை: சந்தேகநபருக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு |