இலங்கையில் நோய் அறிகுறிகள் அற்ற கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் நோய் அறிகுறிகள் அற்ற தொற்றாளர்கள் சமூகத்தில் அதிக அளவில் இருக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்களை அடையாளம் காண்பதற்காக பரவலான பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் கமல் ஏ.பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது கொவிட் தொற்று தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் கொவிட் தொற்றினை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனினும் மக்கள் நோய் தொற்றினை மறந்து அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.
சுகாதார வழிக்காட்டல்களை மக்கள் மறந்து செயற்படுவது சிறந்த நிலைமை அல்ல. இந்த நாட்டில் கொவிட் தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக நினைத்து மக்கள் செயற்படுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 20 மரணங்கள் பதிவாகுவதென்பதனை சாதாரணமாக எண்ண கூடாது. மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.